இப்பதான் பிரைட்டா ஆரம்பிக்கிறாங்க.. இரவோடு இரவாக வந்த மெசேஜ்! பெட்ரோல், டீசலுக்கு கட்டுப்பாடு இல்லை!
டெல்லி: நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை, விநியோகம் தொடர்பாக அமலில் இருந்த தற்காலிக கட்டுப்பாடுகளை ஜூலை 1 முதல் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக கடந்த சில வாரங்களாக அமலில் இருந்த இந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது
கடந்த சில வாரங்களாக மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட போர் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்தது. இதன் தாக்கம் உலகம் முழுவதும் எரிபொருள் விநியோகத்திலும் பிரதிபலித்தது.
இதனால், இந்தியாவிலும் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு எரிபொருள் இருப்பை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு சில தற்காலிக கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. குறிப்பாக, கடந்த ஜூன் 12 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை, விநியோகம் மற்றும் கையிருப்பு மேலாண்மை தொடர்பாக சில ஒழுங்குமுறை நடவடிக்கைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.

பெட்ரோல், டீசல்
இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதோடு, தேவையற்ற பதுக்கல் மற்றும் அதிகப்படியான கொள்முதலை கட்டுப்படுத்துவதாகும். மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்தாலும், அதன் முழு தாக்கமும் இந்திய நுகர்வோர் மீது விழாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. எரிபொருள் விநியோகத்தை கண்காணிப்பதற்காக எண்ணெய் நிறுவனங்களுடனும் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசு
இந்த நிலையில், தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு போதுமான அளவில் உள்ளதாகவும், விநியோக சங்கிலி வழக்கமான நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, மக்கள் நலனை கருத்தில் கொண்டு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் விளக்கியுள்ளது.
பெட்ரோலிய அமைச்சகம்
இதுதொடர்பாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல் மற்றும் டீசல் விநியோக நிலைமை தற்போது சீரடைந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விதிக்கப்பட்டிருந்த அனைத்து தற்காலிக கட்டுப்பாடுகளும் ஜூலை 1 முதல் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள்
அந்த அறிவிப்பின்படி, ஜூலை 1 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை, விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் வழக்கம்போல் நடைபெறும். பொதுமக்கள் எரிபொருள் கிடைப்பது குறித்து எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும், நாடு முழுவதும் போதுமான அளவு இருப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன உரிமையாளர்கள்
இந்த அறிவிப்பால் தனியார் வாகன உரிமையாளர்கள், சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள், பேருந்து மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் நிம்மதி அடைந்துள்ளனர். குறிப்பாக, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தில் முன்கூட்டியே அதிக அளவில் வாங்கும் நிலை இனி தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கச்சா எண்ணெய்
இதேவேளை, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சந்தையின் நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், எதிர்காலத்தில் உலகளாவிய சூழ்நிலைக்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவிய பதற்றம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டிருந்த இந்த கட்டுப்பாடுகள் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளதால், ஜூலை 1 முதல் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் வழக்கமான முறையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications