இதுதான் இந்தியாவின் கெத்து! ஈரான்-அமெரிக்கா அச்சுறுத்தலை தாண்டி வந்த.. எல்பிஜி கப்பல்!
தெஹ்ரான்: ஈரானும், அமெரிக்காவும் ஹார்முஸ் நீரிணையை கட்டுக்குள் வைத்திருக்கின்றன. மற்ற நாடுகளின் கப்பல் இது வழியாக பயணிக்க அச்சப்பட்டு வரும் நிலையில், இந்தியாவை நோக்கி வந்த எல்பிஜி கப்பலான சர்வ சக்தி, சுமார் 45,000 டன் எல்பிஜியை ஏற்றிக்கொண்டு இந்த நீரிணையை பத்திரமாக கடந்திருக்கிறது.
மார்ஷல் தீவுகளின் கொடியுடன் பயணிக்கும் 'சர்வ சக்தி' என்ற இந்தக் கப்பல், சுமார் 45,000 டன் எல்பிஜி எரிவாயுவை ஏற்றி இந்தியாவை நோக்கி பாதுகாப்பாக வந்துக்கொண்டிருக்கிறது.

இக்கப்பலில் மொத்தம் 20 பணியாளர்கள் உள்ளனர். இதில் 18 பேர் இந்தியர்கள். நேற்று ஹார்முஸ் நீரிணையைத் தாண்டிய இக்கப்பல், மே 13 அன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கப்பலில் உள்ள எல்பிஜி எரிவாயுவை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) வாங்கியிருக்கிறது என புளூம்பெர்க் தெரிவித்திருக்கிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக ஹார்முஸ் நீரிணை தற்போது மிகவும் அபாயகரமான பகுதியாக மாறியுள்ளது.
சாதாரண நாட்களில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் செல்லும் இப்பகுதியில், தற்போது ஒரு நாளைக்கு வெறும் 6 கப்பல்கள் மட்டுமே செல்லும் அளவுக்குப் போக்குவரத்து குறைந்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் கடல்சார் முடக்கம் காரணமாகப் பெரும்பாலான கப்பல் நிறுவனங்கள் இந்த வழியைத் தவிர்த்து வருகின்றன.
இந்த நேரத்தில் அனைத்து தடைகளையும் உடைத்துக்கொண்டு இந்த கப்பல் பத்திரமாக ஹார்முஸை கடந்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
இந்தியாவின் எல்பிஜி தேவை
இந்தியாவை பொறுத்தவரை இந்த கப்பல் ரொம்பவும் முக்கியமானது. ஏனெனில், நாம் எல்பிஜி தேவைக்கு அரபு நாடுகளைதான் நம்பியிருக்கிறோம். இந்தியா முழுவதும் சமையல் எரிவாயுவின் தேவை ஒரு நாளைக்கு 80,000 டன்னாக உள்ளது. ஆனால் உள்நாட்டு உற்பத்தி 54,000 டன் மட்டுமே. மீதமுள்ள தேவைக்கு இந்தியா இறக்குமதியையே நம்பியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் இந்த விநியோகச் சங்கிலியைப் பாதிக்கக்கூடும் என்பதால், 'சர்வ சக்தி' கப்பலின் பாதுகாப்பான பயணம் இந்தியாவுக்கு நிம்மதியைத் தந்துள்ளதாக மத்திய எண்ணெய் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பல் பிப்ரவரி மாதம் பாரசீக வளைகுடாவிற்குள் நுழைந்தது. துபாய் அருகே மற்றொரு கப்பலில் இருந்து எரிவாயுவை மாற்றிக் கொண்டு, தற்போது ஓமன் வளைகுடா வழியாகப் பாதுகாப்பாக வெளியேறியுள்ளது.












Click it and Unblock the Notifications