விஜய் Vs உதய்.. ’அப்பா’ சட்டையை எடுத்துப் போடும் உதயநிதி ஸ்டாலின்! சைலண்டாய் ரெடியாகும் மாஸ் ப்ளான்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக எதிர்க் கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக மீண்டும் எழுச்சி பெறும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான முக்கிய அரசியல் நகர்வாக, தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளும் திட்டம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. ஜூன் அல்லது ஜூலையில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றனர் திமுகவினர். 2015ல் ஸ்டாலின் மேற்கொண்ட "நமக்கு நாமே" பயணம் கட்சிக்கு புதிய உயிர் கொடுத்த நிலையில், உதயநிதியின் இந்த பயணமும் கட்சியை எழுச்சி பெற வைக்கும் என்கின்றனர் திமுக உடன்பிறப்புகள்.
பல ஆண்டுகளாக தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளே மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்தன. ஆனால் இந்த முறை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று புதிய அரசை அமைத்தது.

இதனால் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், கடந்த தேர்தலில் திமுக மிகப்பெரிய கூட்டணியுடன் களமிறங்கியிருந்தாலும், எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.
திமுக தோல்வி
மேலும், முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் தனது சொந்த தொகுதியிலேயே தோல்வியை சந்தித்தது கட்சிக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தோல்விக்கான காரணங்களை ஆராய திமுக தலைமையிலேயே தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், கட்சியை மீண்டும் மக்கள் மத்தியில் வலுப்படுத்தும் நோக்கில், உதயநிதி ஸ்டாலினை மாநிலம் முழுவதும் நேரடியாக மக்களை சந்திக்கும் அரசியல் முகமாக உருவாக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நமக்கு நாமே
அதன் ஒரு பகுதியாகவே நடைபயண திட்டம் பேசப்பட்டு வருகிறது. கடந்த 2011 தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுக மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது. அப்போது ஸ்டாலின் மேற்கொண்ட "நமக்கு நாமே" பயணம் கட்சிக்கு புதிய உயிர் கொடுத்ததாக திமுக வட்டாரங்கள் கருதுகின்றன. அதேபோல் தற்போது உதயநிதியையும் மக்கள் மத்தியில் நேரடியாக கொண்டு செல்ல வேண்டும் என்பதே கட்சி தலைமையின் திட்டமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடைபயணம் சாதாரண அரசியல் சுற்றுப்பயணம் அல்ல என்றும், கட்சியின் அமைப்பு கட்டமைப்பை புதுப்பிக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
உதயநிதி நடைபயணம்
மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவது, செயலற்ற அமைப்புகளை மாற்றுவது, இளைஞர் மற்றும் மாணவர் அணிகளை மீண்டும் இயக்குவது போன்ற பணிகளும் இதில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஆந்திர அரசியலில் நடைபயணம் மூலம் தலைவர்கள் மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய முறைதான் இங்கும் பின்பற்றப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உதயநிதி ஸ்டாலின்
மக்கள் குறைகளை நேரடியாக கேட்பது, கிராமங்களில் தங்கி பயணம் செய்வது, சிறு கூட்டங்கள் மூலம் பொதுமக்களுடன் நெருக்கம் உருவாக்குவது போன்ற திட்டங்களும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தமிழக அரசியலில் தவெக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதனை நேரடியாக எதிர்கொள்ள திமுக இப்போதே களத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர்.
தமிழ்நாடு அரசியல்
குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் உருவாகியுள்ள புதிய அரசியல் ஈர்ப்பை சமாளிக்க உதயநிதியை முன்னிறுத்தும் முயற்சி தீவிரமாகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடை முடிந்த பிறகு இந்த நடைபயணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்றும், தற்போது சுற்றுப்பயண பாதை, காலஅளவு, பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் தற்போதே தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் வரும் மாதங்களில் தமிழக அரசியல் மேலும் சூடுபிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications