கைமாறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.. ரூ.15,600 கோடிக்கு வாங்கிய லட்சுமி மிட்டல் - ஆதார் பூனவல்லா!
டெல்லி: ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரூ.15,660 கோடிக்கு பிரபல தொழிலதிபர்களான லட்சுமி மிட்டல் மற்றும் ஆதார் பூனவல்லா ஆகியோர் வாங்கி உள்ளனர். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
ஐபிஎல்லில் மொத்தம் 10 அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில் தான் சமீபத்தில் ஆர்சிபி எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன.

அதோடு தொழிலதிபர் கல் சோமானி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்கியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மிட்டல் குடும்பம் வாங்கி உள்ளது. ஸ்டீல் தொழில் துறையில் பிரபல தொழிலதிபர்களாக இருக்கும் லட்சுமி மிட்டல், ஆதித்யா மிட்டல் ஆகியோரின் குடும்பம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பூனாவாலாவுடன் சேர்ந்து வாங்கி உள்ளது.
இவர்கள் 1.65 பில்லியன டாலருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்கி உள்ளனர். இதன் இந்திய மதிப்பு ரூ.15,660 கோடியாகும். இதற்கான ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் என்பது ஐபிஎல்லில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவில் உள்ள பார்ல் ராயல்ஸ், கரீபியனில் உள்ள பார்படோஸ் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகளுக்கும் சேர்த்து கையெழுத்தாகி உள்ளது. இதனால் அந்த 2 அணிகளும் ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் சேர்ந்து லட்சுமி மிட்டல் - ஆதார் பூனவல்லா வசம் வந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மிட்டல் குடும்பம் 75 சதவீத பங்குகளை வைத்திருக்கும். ஆதார் பூனாவல்லா வசம் 18 சதவீத பங்குகள் இருக்கும். மீதமுள்ள 7 சதவீதம் தற்போதைய உரிமையாளரான மனோஜ் படாலே உள்ளிட்ட மற்றவர்களிடம் இருக்கும்.
தற்போது நடக்கும் ஐபிஎல் போட்டி முடிவடைந்த பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் மாற்றம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வர உள்ளது. . கடந்த 2008 ம் ஆண்டில் இருந்தே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராக பிரபல தொழிலதிபர் மனோஜ் படாலே இருந்து வரும் நிலையில் தற்போது அவர் விற்பனை செய்துள்ளார். 7 சதவீத பங்கு தற்போதைய உரிமையாளர்களிடம் இருப்பதால் மனோஜ் படாலே தொடர்ந்து அணியுடன் செயல்பட உள்ளார்.












Click it and Unblock the Notifications