தவெகவுக்கு ஆதரவு இல்லை.. என்டிஏ கூட்டணியில் நீடிக்கிறோம்.. டிடிவி தினகரன் அறிவிப்பு!
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுக, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்திருப்பதாக ஒரு சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது. அடிப்படை ஆதாரமற்றது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக எம்எல்ஏ காமராஜ், அதிமுக எம்எல்ஏ-க்களுடன் தங்கியுள்ளதாகவும் உறுதி செய்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை வென்று, ஆட்சியைப் பிடிக்க மற்ற கட்சிகளின் ஆதரவை நாடியது. குறிப்பாக விசிக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தற்போதைய சூழலில், விசிகவை தவிர்த்து மற்ற 3 கட்சிகளும் ஆதரவு தெரிவித்துவிட்டன. இதனிடையே டிடிவி தினகரனின் அமமுக-வும் விஜய்க்கு ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவின.

இதனால் தவெகவின் உற்சாகம் அடைந்தனர். அமமுக சார்பாக போட்டியிட்டு வென்ற காமராஜ் தவெகவுக்கு ஆதரவளிப்பார் என்றும் பேசப்பட்டது. இந்த நிலையில் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் டிடிவி தினகரன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக ஒரு சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது. அடிப்படை ஆதாரமற்றது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் புதுச்சேரி தனியார் விடுதியிலேயே தங்கியிருக்கிறார். அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே அங்கம் வகிப்பது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன் அமமுக உடன் கூட்டணி அமைக்க விஜய் விரும்பி இருந்தார். அதற்காக செங்கோட்டையன் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அமமுக மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைந்து, அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. 11 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, மன்னார்குடி தொகுதியில் மட்டும் வென்றது.












Click it and Unblock the Notifications