திமுக பிரமுகர்களுக்கு தொடர்பா? கிட்னி திருட்டில் தவெக அரசு அதிரடி.. சிக்கப்போகும் திமிங்கலங்கள்
ஈரோடு: ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் ஏழைப் பெண்களைக் குறிவைத்து அரங்கேறிய சிறுநீரக மோசடி, தற்போது தமிழக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.. கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட இந்த விவகாரத்தை, தவெக அரசு தற்போது தீவிரமாக கையில் எடுத்துள்ளது.. முறைகேட்டில் ஈடுபட்ட புள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீது சட்டத்தின்பிடி இறுக்கப்பட்டு வருகிறது..
ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் ஏழைப் பெண்களை குறிவைத்து நடந்த சிறுநீரக மோசடி, தற்போது தமிழக அரசியலில் பெரும் அதிர்வுகளை உருவாக்கி வருகிறது.

திமுக பிரமுகர்கள்
வறுமையின் பிடியில் இருப்பவர்களை மிரட்டியும், ஆசை காட்டியும் அவர்களின் சிறுநீரகங்களை விற்றுப் பணம் பார்த்த மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.. .. சிபிஐ விசாரணை கோரி கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி மதுரை ஹைகோர்ட் கிளையில் தொடரப்பட்ட வழக்கு, அரசுக்கு அழுத்தத்தை கொடுத்துள்ளது.. இந்த நெருக்கடிக்கு மத்தியில், மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் சித்ரா தலைமையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது..
திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிபாளையம், திருச்சி, ஈரோடு ஆகிய பகுதிகளில் ஏழைத் தொழிலாளர்கள் குறிவைக்கப்பட்டபோது, அந்த மோசடியில் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு இருந்ததாக பல புகார்கள் எழுந்தன.. அப்போதே சிலரை மட்டும் கைது செய்துவிட்டு, அந்த வழக்கு ஏனோ கிடப்பில் போடப்பட்டது.
தவெக அரசு
ஆனால் இப்போது ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, அமைச்சர் அருண் ராஜ் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.. கடந்த ஆட்சியில் முறைகேடுகளுக்குத் துணையாக இருந்த புள்ளிகள், இப்போது தவெக அரசின் நடவடிக்கையால் பதறி போயுள்ளனர்.. "யார் பின்னணியில் இருந்தாலும் சட்டத்தின் கைகளில் இருந்து தப்ப முடியாது" என்று அமைச்சர் தரப்பு தெளிவாகச் சொல்லியிருக்கிறது..
இந்த நெட்வொர்க்கில் டாக்டர்கள், புரோக்கர்கள் என யார் யார் இருக்கிறார்கள் என்பதைத் துப்பறியும் பணி தொடங்கியுள்ளது.. ஈரோடு, திருச்சி, பள்ளிபாளையம் தாண்டி வேறு எங்கெல்லாம் இந்த கிளைகள் பரவியுள்ளன என்பதுதான் சுகாதாரத்துறையின் பெரிய கேள்வி.
மகாராஷ்டிரா மாநில விவசாயிகளிடம் இந்தத் தமிழகக் கும்பல் கைவரிசை காட்டியிருப்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.. மகாராஷ்டிரா சிறப்பு புலனாய்வு பிரிவினர் திருச்சியில் முகாமிட்டு விசாரித்து வருவது, இந்த வழக்கின் தீவிரத்தை உணர்த்துகிறது..
ஈரோடு பள்ளிப்பாளையம்
திருச்சியின் ஸ்ரீதர் மருத்துவமனை, பெரம்பலூரின் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என புகாருக்கு ஆளான இடங்களில் அறுவை சிகிச்சை உரிமம் தற்காலிகமாக பறிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எத்தனை அறுவை சிகிச்சைகள் நடந்தன, இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்ற விபரங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் துருவித் துருவி ஆய்வு செய்து வருகின்றனர்..
"ஏழை மக்களின் வயிற்றில் அடித்த கும்பலை விடக்கூடாது" என்ற கட்டளையோடு, தவெக அரசு இந்த மோசடியின் வேர்களைத் தேடி இறங்கியுள்ளது.. இந்த நெட்வொர்க்கை உடைக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தற்போது களத்தில் பணியாற்றி வருகின்றனர்.. கடந்த ஆட்சியில் முறைகேடுகளுக்குப் பாதுகாப்பாக இருந்த அதிகார வர்க்கம், தற்போது தவெக அரசின் அதிரடியால் நிலைகுலைந்து நிற்கிறது..
இந்த விவகாரம் இப்போது அரசியல் ரீதியாகவும் பேசுபொருளாக மாறியுள்ளது.. பல்வேறு தரப்புகள் இதில் தங்கள் கருத்துகளை முன்வைத்து வருகின்றன.. சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உண்மை நிலை முழுமையாக வெளிவர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்..!!












Click it and Unblock the Notifications