பாரதி பக்கம்
பிப்ரவரி 21, 2001
தேசிய கீதங்கள்
தாயின் மணிக்கொடி
(தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு)
பல்லவி
தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
சரணங்கள்
1.ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் - செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)
2.பட்டுத் துகிலென லாமோ? - அதில்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிருந்தடித் தாலும் -அதை
மதியாததால் வுறுதிகொள் மாணிக்கப் படலம் (தாயின்)
3.இந்திரன் வச்சிரம் ஓர்பால் -அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால் (தாய்)
மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)
4.கம்பத்தின் கீழ்நிற்றல காணீர் - எங்கும்
கரணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார் ( தாயின்)
5.அணியணி யாயவர் நிற்கும் - இந்த
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும் - விறல்
பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்)
6.செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்
தீக்கண் மறவர்கள், சேரன்றன் வீரர்,
சிந்தை துணிந்த தெலுங்கர் -தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்)
7.கன்னடர் ஒட்டியரோடு - போரில்
காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்
பொன்னகர்த் தேவர்க ளொப்ப -நிற்கும்
பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர்.
8.பூதலம் முற்றிடும் வரையும் - அறப்
போர்விறல் யாவும் மறப்புறும் வரையும்,
மாதர்கள் கற்புள்ள வரையும் -பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ராஜபுத்ர வீரர்,
9.பஞ்த நதத்துப் பிறந்தோர் - முன்னைப்
பார்த்த் முதற்பலர் வாழ்ந்த நன் னாட்டார்,
துஞ்சும் பொழிதினும் தாயின் - பதத்
தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும்,
10. சேர்ந்ததைக் காப்பது காணீர்! - அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)












Click it and Unblock the Notifications