பாரதி பக்கம்
வையம் முழுதும்
கண்ணிகள்
மஹாசக்தி தன்புகழ் வாழத்துகின்றோம்!
செய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி
சேர்ந்திட நல்லருள் செய்கவென்றே. (1)
பூதங்கள் ஐந்தில் இருந்தெங்குங் கண்ணிற்
புலப்படும் சக்தியைப் போற்றுகின்றோம்,
வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே. (2)
வேகம் கவர்ச்சி முதலிய பல்வினை
மேவிடும் சக்தியை மேவுகின்றோம்,
ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை
யாங்கள் அறிந்திட வேண்டுமென்றே. (3)
உயிரெனத் தோன்றி உணவுகொண் டேவளர்ந்
தோங்கிடும் சக்தியை ஓதுகின்றோம்.
பயிரினைக் காக்கும் மழையென எங்களைப்
பாலித்து நித்தம் வளர்க்வென்றே. (4)
சித்தத்தி லேநின்று சேர்வ துணரும்
சிவசக்தி தன்புகழ் செப்புகின்றோம்,
இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்
எமக்குத் தெரிந்திடல் வேண்டுமென்றே. (5)
மாறுதலின்றிப் பராசக்தி தன்புகழ்
வையமிசை நித்தம் பாடுகின்றோம்,
நூறுவயது புகழுடன் வாழ்ந்துயர்
நோக்கங்கள் பெற்றிட வேண்டுமென்றே. (6)
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
ஓம்சக்தி என்றுரை செய்திடுவோம்.
ஓம்சக்தி என்பவர் உண்மை கண்டார், சுடர்
ஒண்மை கொண்டார், உயிர் வண்மை கொண்டார். (7)