தூய்மைத் தொழிலாளர் மறுமலர்ச்சி மாநாடு
மனிதர் கழிவை மனிதர் அகற்றும் கொடூரம் இன்னும் தொடர்ந்துகொண்டு இருப்பது, நம் சமூகம் நாகரிகமானது என்பதற்குப் பொருத்தமாக இல்லை. இந்த அநாகரிகத்தை அடியோடு ஒழிக்க கடந்த 26 ஆம் நாள் கோவையில் மாபெரும் மாநாடு ஒன்றினை ஆதித்தமிழர் பேரவை கூட்டியது.
கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் அவல நிலையை அப்படியே படம் பிடித்திருந்த புகைப்படக் கண்காட்சியும் அம்மாநாட்டில் இடம் பெற்றிருந்தது. மேல்தட்டுப் பார்வையாளர்களுக்கு அருவெறுப்பை ஏற்படுத்திய அந்தப் படங்களை அமுதன் என்னும் கலைஞர் மிக எதார்த்தமாக எடுத்திருந்தார். அவருடைய "செந்தமிழ் நாடெனும் போதினிலே எனும் குறும்படம் அங்கு வெளியிடப்பட்டது.
திரையின் பின்னணியில் பாரதியாரின் செந்தமிழ் நாடெனும் போதினிலே என்னும் பாடலை எம்.எஸ். சுப்புலட்சுமி பாட, திரையில் தொழிலாளர்கள் மலம் அள்ளிக் கொண்டிருந்தார்கள். சாக்கடைத் தொழிலாளர்களின் அவலம் நிறைந்த வாழ்வை அங்கு வெளியிடப்பட்ட மலத்தில் புதையும் மாண்பு எனும் நூல் விளக்கியது.
கோவை, ஆர்.எஸ். புரம், மாநகராட்சிக் கலையரங்கில் முழுநாள் நடைபெற்ற மாநாட்டை ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத்தலைவர் அதியமான், பொதுச் செயலாளர் எழில். இளங்கோவன், மாணவர் அணித்தலைவர் நீலவேந்தன் முதலான பொறுப்பாளர்கள் மிகச் சிறப்பாக நடத்தினர். மிகப்பெரும் அளவில் திரண்டிருந்த தொழிலாளர்களும், பொது மக்களும் மாநாட்டிற்குச் சிறப்புச் சேர்த்தனர்.
காலையிலும் மாலையிலும் நடைபெற்ற கருத்தரங்குகளில், ஏட்டுச் சட்டங்களும் நடைமுறைகளும், மலம் அள்ளுவோர் வாழ்வில் மறுமலர்ச்சி ஆகிய தலைப்புகளில் பலரும் உரையாற்றினர். பேரா. இளங்கோவன், வ. கீதா, வழக்குரைஞர் ப.பா. மோகன், பேரா. அரங்க மல்லிகா உள்ளிட்ட பலரது உரைகளும் சிந்தனையைத் தூண்டின.
மாலையில் நடந்த பொது அரங்கிற்கு அதியமான் தலைமை வகித்தார். க்ன் தலைமையுரையில், ""இதனை ஒழித்து விட்டால் பல தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடுமே என்று சிலர் கவலைப்படுகின்றனர். போனால் போகட்டும். இது ஒரு வேலையே அன்று. மனிதர்களை இழிவுபடுத்தும் இந்நிலை மாறி நம் மக்கள் மாற்று வேலை பெறுவதையே நாம் விரும்புகின்றோம் என்று உறுதிபடப் பேசினார்.
நிறைவரங்கில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருட்டிணசாமி, தி.மு.க. வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவை. இராமநாதன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், தமிழ்நாடு முசுலிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேரா. ஜவாகீருல்லா, தென்செய்தி பொறுப்பாசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications