சங்க இலக்கியங்களில் உயிர் நேயம்: அறிவுமதி
திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முத்தமிழ் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி கலந்து கொண்டார்.
அறிவுமதி பேசுகையில், நாட்டுப்புற மக்களிடையே தான் இயற்கையிலேயே கவிதைத் தனம் நிறைந்துள்ளது. அங்குள்ள வேளாண்மை வாழ்க்கையில் இருந்துதான் இலக்கிய அழகு, இசை, ஆடல்,பாடல் போன்றவைகள் தோன்றியுள்ளன.
ஒரு மனிதன் உழைக்கும் நேரங்களில் இருந்து தோன்றியது தான் மரபுக் கவிதை. உழைப்பற்ற ஓய்வு நேரங்களில் தோன்றியது புதுக்கவிதை.
கலைகள், பாடல்கள் ஆகியவை வேளாண் வாழ்க்கையில் இருந்து கண்டு எடுக்கப்பட்ட அற்புதங்கள் ஆகும். சங்க இலக்கியங்களில் மனித நேயத்தை விட உயிர் நேயம் மிக அதிகமாக இருந்தது.
அது போன்று தற்போது மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் உயிர் நேயம் என்பது இயற்கையாக வர வேண்டும். அந்த உயிர் நேயம் புன்செய் நிலங்களிலும், மலை வாழ்பகுதிகளிலும் வாழும் மக்களிடத்தில் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன.
அதனால் வேளாண் கல்லூரி மாணவர்கள் தங்கள் ஆய்வுகளையும், ஆராய்ச்சிகளையும் கிராமத்து நிலங்களில் மேற்கொள்ள வேண்டும்.
அப்போது அங்குள்ள மக்கள் வேளாண் அறிவோடு கலை அறிவையும் அள்ளி அள்ளிக் கொடுப்பார்கள். மேல் நாட்டு இசைகளும், இசைக் கருவிகளும் நம்மை எப்படி அடிமைப்படுத்தினாலும், அதை அடித்து நொறுக்குகிற ஒரே சக்தி நாட்டுப்புற இசை மற்றும் பாடல்களுக்கும் மட்டுமே உண்டு.
அதனால் நாட்டுப்புறக் கலைகளையும், பாடல்களையும் பாடத் திட்டத்தோடு மாணவர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கல்வியோடு உழைக்கக் கற்றுக் கொண்டால் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு எதிர்கால வாழ்க்கை மிக சிறப்பாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றார் அறிவுமதி.