இந்தியத் தம்பதியின் நூதனக் கோவில்- பக்தர்கள் அலை மோதல்!
இந்தியாவைச் சேர்ந்த திராஜ்லால் கரியா மற்றும் சுசீலா தம்பதியினர் எஸ்ஸக்ஸ் மாநிலம், கிளாக்டன் நகரில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீட்டின் ஒரு படுக்கை அறையை கோவிலாக மாற்றியுள்ளனர்.
அங்கு இந்தியாவிலிருந்து வரவழைத்த, மார்பிள் கல்லால் ஆன 17 சுவாமி சிலைகளை வைத்து கோவிலாக வடிவமைத்துள்ளனர். இந்த நூதனக் கோவில் இங்கிலாந்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்துக்கள் பலர் இந்தக் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதுவரை 50 ஆயிரம் பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தந்துள்ளதாக கரியா தம்பதியினர் பெருமையுடன் கூறுகின்றனர்.
இதுகுறித்து கரியா கூறுகையில், இந்தக் கோவிலை தொடங்கி வைக்க இந்தியாவிலிருந்து ஒரு குருக்களை வரவழைத்தோம். இங்கு தினசரி வழிபாடுகளை நடத்தி வருகிறோம்.
இந்தக் கோவில் குறித்து வாய் மூலமாக பலருக்கும் தகவல் பரவி, ஏராளமான இந்துக்கள் இங்கு வருகை தருகின்றனர். இந்துக்கள் அல்லாதவர்களும் இந்தக் கோவிலைப் பார்த்து வியந்து செல்கின்றனர்.
கட்த 30 ஆண்டுகளாக இந்தக் கோவிலை நாங்கள் நடத்தி வருகிறோம். இதுவரை 50 ஆயிரம் பக்தர்கள் வரை வந்துள்ளனர். மான்செஸ்டர், லீசெஸ்டர், லண்டன் மற்றும் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்தக் கோவில் இந்தியா மற்றும் கனடாவிலும் மிகவும் பிரபலமாக உள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. சில பக்தர்கள் இங்கு தங்கியிருந்து வழிபட்டுச் செல்கின்றனர் என்றார் கரியா.