இலங்கை சமூக சேவகி தங்கம்மா அப்பாக்குட்டி மரணம்
யாழ்ப்பாணம்: இலங்கையைச் சேர்ந்த பழம் பெறும் சைவத் தொண்டரும், சமூக சேவகியுமான தங்கம்மா அப்பாக்குட்டி மரணமடைந்தார்.
சைவத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் தொண்டாற்றிய தங்கம்மா, "சிவத்தமிழ்ச் செல்வி" என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
அண்மைக்காலமாக நோய் வாய்ப்பட்டு யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 83.
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகியாக இருந்து சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய தங்கம்மா அப்பாக்குட்டி ஏழை மக்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும் ஆதரவு இல்லங்கள் அமைத்து சேவையாற்றி வந்தார்.
பல நாடுகளுக்கும் சென்று சைவ சொற்பொழிவுகள் ஆற்றியும் தனது ஆதரவு இல்லங்களுக்கு நிதி திரட்டியும் இறக்கும் வரை தனது பணியைச் செய்து வந்தார்.
கருணாநிதி இரங்கல்:
தங்கம்மாவின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் சமூக சேவகியாக திகழ்ந்த தங்கம்மா அப்பாக்குட்டி கடந்த ஞாயிறன்று இயற்கை எய்திய செய்தியறிந்து மிகவும் வேதனை அடைகிறேன்.
தங்கம்மா அப்பாக்குட்டி, தமிழ் மொழியை முறைப்படி கற்று ஆசிரியராக விளங்கியவர். தமிழ்ப் பண்டிதை என ஈழ பகுதி வாழ் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர். திருமணம் செய்துகொள்ளாமல் சமூக சேவகியாகவே வாழ்ந்தவர். நூலகம் ஒன்றை நிறுவி சிறந்த நூல்கள் வெளியிடுவதற்கும் உதவிகள் புரிந்துள்ளார்.
ஆசிரியப் பணி, சமூகப் பணி மூலம் அன்பிற்குரியவராகத் திகழ்ந்த பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி மறைவு ஈழத் தமிழ் மக்கள் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். அவரது பிரிவால் வருந்தும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications