2008ன் முக்கிய சம்பவங்கள்!

காடுவெட்டி குருவின் பேச்சால் கொந்தளித்தது திமுக. விளைவு, கூட்டணியிலிருந்து பாமகவை விலக்கி வைத்து முடிவெடுத்தது திமுகவின் உயர் மட்ட செயல் திட்டக் குழு.
ஜூன் 17ம் தேதி எடுக்கப்பட்ட முடிவு அவசரப்பட்டு எடுத்த முடிவல்ல. இனிமேலும் பொறுக்க முடியாது என்ற வேகத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும்.
திமுக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்து வந்த பாமக, ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே ஆளுங்கட்சிக்கு எதிரான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது.
இருப்பினும் மக்களைப் பாதித்த பிரச்சினைகளை கையில் எடுத்து அது போராடியதால், திமுகவால் பாமகவை கடுமையாக கண்டிக்கவோ, துண்டித்து விடவோ முடியவில்லை.
மணல் கடத்தல், அரிசிக் கடத்தல், மது விலக்கு, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என வரிசையாக போராட்டங்களை அடுக்கி ஆளுங்கட்சிக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து வந்தார் டாக்டர் ராமதாஸ்.
எப்படி பாமகவை குட்டி வைப்பது என்று திமுக தரப்பு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் காடுவெட்டி குருவின் வடிவில் திமுகவுக்கு சரியான வாய்ப்பு கிடைத்தது.
காடுவெட்டி குரு மிகக் காட்டமாக, முதல்வரையும், அவரது குடும்பத்தினரையும், அமைச்சர்களையும் சரமாரியாக விமர்சித்துப் பேசப் போக, அதை வைத்து பாமகவை கூட்டணியிலிருந்து விலக்கியது திமுக.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முடிவு இது. இருப்பினும் இப்போது இரு தரப்பும் சமரசமாகி விட்டது. குருவும் ரிலீஸாகி விட்டார். அடுத்த தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரலாம் - சில பல நிபந்தனைகளோடு.












Click it and Unblock the Notifications