தமிழைப் படித்தால் உயர்நிலையை அடையலாம்: நெல்லை கண்ணன்
துபாயில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தமிழ்ச் சங்கத்தின் சார்பில் உங்கள் பொங்கல் அரங்கம் 2009 நிகழ்ச்சி 16.01.2009 வெள்ளிக்கிழமை மாலை இந்திய உயர்நிலைப்பள்ளி ஷேக் ராஷித் அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. யுஎஇ தமிழ்ச் சங்க தலைவர் ரமேஷ் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.
அவர் தனது தலைமையுரையில் யுஎஇ தமிழ்ச் சங்கத்திற்கு நல்லாதரவு நல்கி வரும் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் சையத் எம். ஸலாஹுத்தீன் அய்யா உள்ளிட்டவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்தார்.
மேலும் இச்சங்கத்தின் சார்பில் மதுரையில் உள்ள பார்வையற்றோர் பள்ளி உள்ளிட்டவற்றிற்கு உதவிடும் பணியினைத் துவக்கி உள்ளதாகத் தெரிவித்தார். அமீரகத் தமிழர்கள் தங்களது முயற்சிக்கு ஒத்துழைப்பினை நல்கிட வேண்டுகோள் விடுத்தார்.
விழாக்குழு செயலாளர் சலீம் கான் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினர் தமிழ்க் கனல் நெல்லை கண்ணன் தனது உரையில், தமிழைப் படித்தால் வாழ்வில் உயர்நிலையினை அடையலாம். குழந்தைகளை அவர்களது விருப்பப்படி சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களது விருப்பங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது என்றார்.
ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் சையத் எம் ஸலாஹூத்தீன் யுஏஇ தமிழ்ச் சங்கத்தின் பணிகளைப் பாராட்டினார்.
டெல்லி தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர் கே.வி.கே. பெருமாள் தனது உரையில், நான் வந்திருப்பது துபாயா அல்லது தமிழகமா என வியக்கும் அளவு இங்கு தமிழ் மக்கள் கூடியிருப்பது வியக்க வைக்கிறது. இயன்றவரை தமிழிலேயே நாம் பேச வேண்டும். இது வாழ்வை வசப்படுத்தும் என்றார்.
இந்திய கம்யூனிட்டி வெல்ஃபேர் கமிட்டி கன்வீனர் கே. குமார் தனது உரையில் கேரள மக்கள் ஓணம் போன்ற பண்டிகைகளை பெரிய அளவில் அமீரகத்தில் கொண்டாடுகின்றனர். அதே போல் பொங்கல் பண்டிகையினை தமிழ் அமைப்புகள் சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும் என நினைத்ததுண்டு. அத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ள யுஎஇ தமிழ்ச்சங்கத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சிறப்பான சேவை புரிந்த ஆம்பல் அப்பாங்கம் கௌரவிக்கப்பட்டார். யுஎஇ தமிழ்ச்சங்க செயலாளர் பிரசன்னா உள்ளிட்ட பலர் பேசினர்.
மணவாழ்க்கை என்பது மனம் சேர்ந்ததா ? இல்லை பணம் சேர்ந்ததா ? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்திற்கு நடுவராக நெல்லை கண்ணன் பங்கேற்றார். இப்பட்டிமன்றத்தில் குணா, கங்கா, வாஹித், விஜயஸிரி, செந்தில்வேலன், இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறுவர், சிறுமியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியினை சலீம் கான் மற்றும் அமீரா தொகுத்து வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை யுஏஇ தமிழ்ச்சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
வஹிதா ஜெய்தி நன்றி கூறினார்