குரலிசையில் பெரிய புராணம்-பதிவு தொடங்கியது
பன்னிருதிருமுறைப் பாடல்களில் ஒன்றான பெரியபுராணம் முழுமையையும் குரலிசையில் பதிவு செய்யும் முயற்சியை தேவாரம் மின்னம்பல தளம் (www.thevaaram.org) தொடங்கியுள்ளது.
உலகெங்கும் வாழும் தமிழர்கள் 18,246 பாடல்களையும் இசையாகவும் கேட்டுப் பயனுற வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்தத் தளத்தில் பன்னிரு திருமுறைப் பாடல் ஒவ்வொன்றுக்கும் இசை வடிவம் சேர்க்க முயற்சி நடக்கிறது.
எட்டாம் திருமுறை திருவாசகம் முழுவதையும் (658 பாடல்கள்) குரலிசையாக இதில் கேட்கலாம். மேலும் பதினொன்றாம் திருமுறையில் உள்ள 1,385 பாடல்களில் 392 பாடல்களையும் குரலிசையாகக் கேட்கலாம்.
மேலும் பன்னிரண்டாம் திருமுறையின் 4,274 பாடல்களுக்கும் குரலிசை அமைக்கத் தொடங்கியுள்ளது இந்தத் தளம். இதுவரை 12ம் திருமுறை முழுமையையும் குரலிசையாக இதுவரை பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பன்னிரு திருமுறைப் பாடல்களில் பெரும் பகுதியை இசைப் பேரறிஞர் தருமபுரம் சுவாமிநாதன் குரலிசையாகப் பதிவு செய்த காலங்களில் அவருடன் முழுமையாக ஒத்துழைத்த பெருந்தகையாளர், பொற்றாளம் ஆறுமுகம் அவர்கள்.
சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் அரங்க இராமலிங்கம், தருமை ஆதீனப் புலவர் க. ஆறுமுகம், சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் பொருளாளர் திரு. அ. ச. ஞா. மெய்கண்டான் ஆகியோருடன் பொற்றாளம் ஆறுமுகம் ஆய நால்வரும் ஒரு குழுவாகி, சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீச்சரர் கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன் குரலிசை வழங்க, இசைக் கருவிகள் துணைநிற்க, 12ஆம் திருமுறைப் பாடல்களைக் குரலிசையாகத் தரமான ஒலிப்பதிவகம் ஒன்றில் பதிவுசெய்து வருகிறார்கள்.
கடந்த மாசி 4ம் நாள் திங்கள்கிழமை (16.2.2009) இந்தத் திருப்பணி தொடங்கியது.
மூன்று நாள்கள் பதிவுப் பணி நடைபெற்று, இதுவரை 138 பாடல்கள் பதிவாயின.
இப்பணி தொடர்ந்து 4,274 பாடல்களும் குரலிசையாகப் பதிவாக 6 மாதங்கள் ஆகலாம். ஒரு பாடலைக் குரலிசையாகப் பதிவு செய்ய ரூ. 100 வரை செலவாகிறது. இத்திட்டம் உரிய காலத்தில் நிறைவேறுமாயின் மொத்தச் செலவு ரூ. 500,000 ஆகலாம்.
சிங்கப்பூர் அருள்மிகு உருத்திரகாளி அம்மன் கோயில் திருமுறை மாநாடு ஏற்பாட்டுக் குழுவினர் இந்த முயற்சிக்கு நன்கொடை வழங்கி உற்சாகமூட்டி உள்ளனர்.
பாயிரம் தொடக்கம் வெள்ளானைச் சருக்கம் வரை புராணங்களாகவோ, தனித்தனிப் பாடல்களாகவோ அன்பர்கள் பொறுப்பேற்று நிதி வழங்கி இத்திட்டம் விரைந்து நிறைவு பெற உதவலாம் என இந்தத் தளத்தினர் தெரிவித்துள்ளனர்.
நன்கொடைகளை, க. சச்சிதானந்தன் என்ற பெயருக்கு, காந்தளகம், 68, அண்ணா சாலை, சென்னை 600002, இந்தியா என்ற முகவரிக்கு அனுப்பலாம். (Donations in favour of K. Sachithananthan, may be mailed to Kaanthalakam, 68, Annaa Saalai, Chennai 600002, India)
மின்னஞ்சல் email: [email protected]
கடன் அட்டை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர் பின்வரும் இணையதள முகவரிக்குச் செல்க-http://tamilnool.com/payment.php
பதிவாகிய குரலிசையைத் தேவாரம் மின்னம்பல தளத்தில் (http://www.thevaaram.org/) கேட்கலாம்.












Click it and Unblock the Notifications