அழகும், அறிவும் சேர்ந்த எழுத்தாளர் ஹிமானி டால்மியா
சென்னையைச் சேர்ந்த ஹிமானிக்கு வயது ஜஸ்ட் 24தான். ஆனால் இந்த வயதிலேயே பன்முகத் திறமை கொண்டவராக திகழ்கிறார் ஹிமானி.
தனது குடும்பத் தொழிலின் கம்யூனிகேஷன் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவின் தலைவராக இருந்து வரும் இவர் தீராத எழுத்தார்வம் கொண்டவராகவும் திகழ்கிறார்.
நகர்ப்புற இளைய தலைமுறையை அடிப்படையாகக் கொண்டு நூல்கள் எழுதி வருகிறார். லேட்டஸ்டாக இவர் எழுதியுள்ள நூல் லைப் இஸ் பெர்பக்ட்.
இந்த நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, நந்தினி ரமணி, காவேரி லால்சந்த், ஷீலா ஜெயப்பிரகாஷ், ரன்வீர் ஷா என பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
குழு உரையாடல் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நன்றாக எழுதுகிறீர்கள். ஏன் நகர்ப்புறத்தை மட்டுமே உங்களது கதையின் மையமாக வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, எனக்குத் தெரிந்ததை மட்டும்தான் நான் எழுத முடியும். நான் சிட்டியில் பிறந்து வளர்ந்த பெண். பிற பகுதிகளைப் பற்றி எனக்குத் தெரியாது. தெரியாததை தெரிந்தது போலக் காட்டிக் கொள்ளவும் எனக்குத் தெரியாது. இருந்தாலும் எனது வருங்கால நூல்களில் அனைத்துத் தரப்பையும் நிச்சயம் தொடுவேன் என்று நம்புகிறேன் என்கிறார்.