குற்றாலத்தில் சூடு பிடிக்கும் சீசன்!
குற்றாலம்: குற்றாலத்தில் சீசன் 2 வாரங்களாக அசத்தி வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
குற்றாலத்தில் கடந்த இரண்டு வாரங்களில் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் அனைத்து நாட்களும் சாரலுடன் சீசன் அசத்தி வருகிறது. நேற்று மதியம் வரை சாரல் இல்லை. அதன்பின்னர் சற்று இதமாக சூழல் நிலவியது.
ஐந்தருவி பகுதியில் சற்று லேசான சாரல் பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டி மேக கூட்டங்கள் தவழ்ந்து சென்றன. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, செண்பகாதேவி அருவி ஆகியவற்றில் தண்ணீர் நன்றாக கொட்டியது. ஜூலை மாதம் துவங்கியது முதல் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கிறது.
நேற்று குற்றாலத்தில் விடுமுறை தினங்களில் உள்ளது போல் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் பகுதியில் சுற்றுலா பயணிகள் வரிசையி்ல் நின்று குளித்தனர். ஐந்தருவியில் ஆண்கள் மட்டும் வரிசையில் நின்று குளித்தனர்.
தடாகத்தில் மூழ்கி வாலிபர் பலி
இதற்கிடையே பழைய குற்றாலத்தில் உள்ள தடாகத்தில் மூழ்கி திருமங்கலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பலியானார்.
திருமங்கலம் எம்ஜிஆர் சோழவந்தான் ரோட்டை சேர்ந்தவர் சோணமுத்து மகன் ரவிகுமார். லோடுமேன். அதே பகுதியை சேர்ந்த சித்தரைவேலு மகன் செல்வம். மோகன் மகன் கருப்பையா ஆகியோர் குற்றாலத்திற்கு வந்தனர்.
அவர்கள் மெயின் அருவியில் குளித்து விட்டு பழைய குற்றாலத்திற்கு சென்றனர். அங்கு அருவியில் தண்ணீர் குறைவாக விழுந்ததால் மலை பகுதிக்கு சென்றனர்.
பழைய குற்றால அருவிக்கு மேல் சிறிய அருவி மற்றும் தடாகம் உள்ளது. அந்த அருவியை ரவிக்குமார் பார்த்து ரசித்துள்ளார்.. அப்போது அவர் தவறி தடாகத்தில் விழுந்தார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை
இதனையறிந்ததும் கருப்பையா ஓடிவிட்டாராம். செல்வம் குற்றாலம் போலீசில் தகவல் கூறினார். போலீசார் மற்றும் தென்காசி தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) மாடசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கோட்டூர் சாமி, சண்முகவேல், செல்வம், முருகன், விரைந்து சென்று தடாகத்தில் தேடினர். ஆனால் ரவிகுமாரை கண்டுபிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து தேடுதல் பணி நடந்தது. இந்நிலையில் தடாகத்தி்ன் ஓரத்தில் ரவிகுமார் உடல மிதந்தது.
போதிய வெளிச்சம் இல்லாததாலும், வனப்பகுதி என்பதாலும், இரவு ரவிகுமார் உடலை கொண்டு வர முடியவில்லை.
இன்று காலையில் அவரது உடல் மீட்கப்பட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு பரிசோதனை நடத்தப்படும். இதுகுறித்து குற்றாலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.