வேலைகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை-ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று துணை முதல்வர் ஸ்டாலி்ன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அருகே துபாயைச் சேர்ந்த ஹர்ஷா குழுமம் கண்ணாடிகள் மற்றும் எண்ணெய் துரப்பனக் கருவிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கவுள்ளது.
ரூ. 1,500 கோடி முதலீட்டில் தொடங்கப்படும் இந்தத் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் டிசம்பரில் நடக்கிறது. 2011ம் ஆண்டில் தனது உற்பத்தியை இந்த நிறுவனம் தொடங்கவுள்ளது.
இந் நிலையில் சென்னை அருகே தொழிற்சாலைக்கான இடத்தைத் தேர்வு செய்வது குறித்து இந் நிறுவனத்தின் தலைவர் அருண் மிராண்டா தலைமையிலான அதிகாரிகள் இன்று துணை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், கும்மிடிப்பூண்டி ஆகிய மூன்று பகுதிகளி்ல் உள்ள இடங்களைக் குறிப்பிட்டு அதில் ஓரிடத்தில் தொழிற்சாலையை தொடங்க உதவ வேண்டும் என்று கோரினர்.
இந்தக் கோரிக்கையை ஏற்ற ஸ்டாலின், தமிழகத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் தமிழக தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னிரிமை தருமாறு கேட்டுக் கொண்டார்.
இது குறித்து நிருபர்களிடம் பேசிய அருண் மிராண்டா, இந்தத் தொழிற்சாலை மூலம் நேரடியாக 1,200 வேலைவாய்ப்புகளும் மறைமுகமாக 1,500 வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
இதில் ஸ்டாலினின் கோரிக்கைப்படி தமிழக வாலிபர்களுக்கே இங்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.