8 ஆண்டு போராட்டத்திற்குப் பின்னர் லாட்டரிப் பரிசைப் பெறும் அதிர்ஷ்டசாலி
எஸ்.கிருஷணக்குமார் என்பவர் கடந்த 2001ம் ஆண்டு லாட்டரிச் சீட்டு வாங்கினார். அதற்கான குலுக்கல் 2001ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி நடந்தது. அதில், அவருக்கு ரூ. 1 லட்சம் பரிசு விழுந்தது.
இதையடுத்து தனது பரிசுச் சீட்டை அரசிடம் அவர் ஒப்புவித்தார். இதைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு மார்ச் 2001 அன்று அவருக்கு கிடைத்தது.
இந்த நிலையில், எட்டு மாதங்கள் கழிந்த நிலையில் கிருஷ்ணக்குமாருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், உங்களது லாட்டரிச் சீட்டு இரண்டாக கிழிந்திருப்பதால் பரிசுத் தொகையை வழங்க இயலாது என்று அதில் அரசு கூறியிருந்தது.
ஆனால் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசின் நிதித்துறைக்கு லாட்டரிச் சீட்டுகள் பிரிவு ஆணையர் பரிசுத் தொகை வழங்கலாம் என்று பரிந்துரை அனுப்பியிருந்தார். ஆனால் இந்த பரிந்துரை பின்னர் ரத்து செய்யப்பட்டு விட்டதாம்.
இதையடுத்து கிருஷ்ணக்குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பால் வசந்தகுமார், மனுதாரர் சமர்ப்பித்த லாட்டரிச் சீட்டு போலியானதல்ல மற்றும் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பது தெளிவாகிறது. இதை லாட்டரிச் சீட்டுகளுக்கான பிரிவின் ஆணையரின் பதிலே தெளிவுபடுத்துகிறது.
லாட்டரிச் சீட்டு உண்மையானதுதான் என்று தெரிய வந்த பின்னர், பரிசுத் தொகையை அளிப்பதை ஆணையரே செய்திருக்கலாம். அவருக்கு அந்த அதிகாரம் உள்ளது. ஆனால் நிதித்துறைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
பரிசுக்குரிய நபர் சமர்ப்பித்த லாட்டரிச் சீட்டு சரியானதே என்பதை ஆணையம் தெளிவுபடுத்தி விட்ட நிலையில், பரிசுத் தொகையை வழங்காமல், நிராகரித்திருப்பது நியாயமல்ல. மேலும் தமிழ்நாடு லாட்டரிச் சீட்டு விதிமுறை 37வது பிரிவின் கீழ் குறிப்பிட்ட 60 நாட்களுக்குள் மனுதாரர் தனது லாட்டரிச் சீட்டினை அரசிடம் ஒப்படைத்துள்ளார்.
எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்று அவருக்குரிய பரிசுத் தொகையான ரூ. 1 லட்சத்தை வழங்க வேண்டும். மேலும் கடந்த 8 ஆண்டு காலத்திற்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டியும் வழங்கிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறினார்.
அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு வரும் என்பார்கள். கிருஷ்ணக்குமாருக்கோ கோர்ட் மூலம் வந்துள்ளது.