எழுத்தாளர்கள் பூரம், ரேவதிக்கு ஆர்.வி. விருது
சென்னை: ஆர்.வி.அறக்கட்டளையின் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருது இந்த ஆண்டு பூரம் எஸ். சத்தியமூர்த்தி மற்றும் ரேவதி என்ற பெயரில் எழுதி வரும் டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
சிறுவர்களுக்கான கண்ணன் நாளிதழை நடத்திய பெருமைக்குரியவர் ஆர் வெங்கட்ராமன் எனப்படும் ஆர்.வி. இவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் வரும் 29ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
தமிழ் எழுத்து உலகிற்கு அவர் ஆற்றிய சேவைகளை போற்றும் வகையில் ஆர்.வி. அறக்கட்டளை ஆண்டு தோறும் விருதுகளை வழங்க இருக்கிறது. இந்த விருதுடன் தலா ரூ. 10 ஆயிரம் பொற்கிழியும் பரிசாக வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு விருதுகள் அவரது நினைவு நாளில் சேத்துப்பட்டு மேயர் ராமநாதன் சாலையில் உள்ள சங்கராலயம் அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியின் போது மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடாதிபதி சுவாமி கமலாத்மானந்தாவால் வழங்கப்படுகிறது.
மேலும், விழாவில் சாதனையாளர் ஆர்.வி என்று நூலும் வெளியிடப்படுகிறது. இந்த நூலை கமலாதமானந்தாவிடம் இருந்து எழுத்தாளர் பெ.சு.மணி பெற்று கொள்கிறார்.
நிவேதிதா பதிப்பகம் உருவாக்கியுள்ள ஆர்.வி. சிறுகதைகள் தொகுதி 1, தொகுதி 2 என்ற இரண்டு நூல்களை தினமணி நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன் வெளியிடுகிறார். இதை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி பெற்று கொள்கிறார்.