அருவிகளில் வெள்ளம்- குற்றாலத்தில் குளிக்க தடை
குற்றாலம்: தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் இந்தாண்டு சீசன் காலம் முடிந்த பின்பும் அருவியில் தொடர்ந்து தண்ணீர் விழுந்து வருகிறது. கடந்த சில தினங்களாக குற்றாலம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று அதிகமாக தண்ணீர் கொட்டும் ஐந்தருவியிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்று கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
இவர்கள் புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் குளித்தனர்.
இரண்டாம் கட்ட சீசன் அருமையாக உள்ளதால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவியில் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது.
ஐந்தருவியில் உள்ள ஐந்து கிளைகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது.
பாபநாசம், சேர்வலாறு அணை நீர்மட்டம் உயர்வு
மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் சமீபகாலமாக பருவமழை ஏமாற்றியதால் பிரதான பாசன அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.
வடகிழக்கு பருவ மழை தொடங்கும் வரை குடிநீர், பாசன தேவையை நிறைவு செய்ய முடியுமா என்ற அச்சம் நிலவி வந்தது.
இந்த நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
மேற்குதொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று 38.50 அடியாக இருந்து பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 42.50 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 2283 கன அடி தண்ணீர் வருகிறது.
இதே போல் 51.90 அடியாக இருந்த மணிமுத்தாறு அணை 52.10 அடியாக இருந்த சேர்வலாறு அணை 64.97 அடியாகவும், 40 அடியாக இருந்த கடனா அணை 43.50 அடியாகவும் 49 அடியாக இருந்த ராமநதி அணை 51 அடியாகவும் உயர்ந்துள்ளது.