சென்னையில் திரைப்பட எழுத்தாளர்கள் சங்க மாநாடு!
சென்னை: அகில இந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க மாநாடு சென்னையில் வருகிற மார்ச் மாதம் நடக்கிறது.
இம்மாநாடு குறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க பொதுச்செயலாளர் வி.சி.குகநாதன்
புதன்கிழமை மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
"திரைப்பட துறையில் எல்லா சங்கங்களும் வலுவாக உள்ளன. ஆனால், கதாசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இனம் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறது. எனவே பழைய சாதனை எழுத்தாளர்களை கவுரவிக்க திட்டமிட்டுள்ளோம்.
திரைப்பட துறையில் எழுத்தாளராக இருந்து முதல்முதலாக முதல்வரான பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருக்கிறோம். இந்த விழா வருகிற 21-ந் தேதி மாலை 5 மணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை திரையரங்கில் நடைபெற இருக்கிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கே.ஆர்.ஜி., அமைச்சர் எ.வ.வேலு, கவிஞர்கள் வாலி, அப்துல்ரகுமான், பிறைசூடன், பா.விஜய், நா.முத்துக்குமார், படஅதிபர்கள் ஏவி.எம்.சரவணன், எஸ்.தாணு, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் விசு ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
அகில இந்திய அளவில் அனைத்து திரைப்பட எழுத்தாளர்களையும் கூட்டி சென்னையில் வருகிற மார்ச் மாதம் மாநாடு நடத்தவும் தீர்மானித்து இருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் சாதனை புரிந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்குவது என்றும் முடிவு செய்திருக்கிறோம்..." என்றார் குகநாதன்.












Click it and Unblock the Notifications