தமிழறிஞர் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதி
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...
பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார், திருவாரூர் மாவட்டம் மேலப்பெருமழை கிராமத்தில் 1909-ம் ஆண்டில் பிறந்தவர்.
அவர் பண்டிதமணி கதிரேசன் செட்டியார், விபுலானந்த அடிகள், சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழ் அறிஞர்களிடம் பயின்று, ஆழ்ந்த தமிழ்ப் புலமை பெற்று, திருவாசகம், நற்றிணை, அகநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்ற 21 நூல்களுக்கு உரை எழுதியதுடன், செங்கோல், மானனீகை முதலிய நாடக நூல்களையும் இயற்றிய தமிழறிஞர். அவரது நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாடமாகக் கற்பிக்கப்படும் சிறப்பினையும் பெற்றுள்ளன.
இத்தகைய சிறப்புகள் பலவற்றைக் கொண்டு, தமிழ்த் தொண்டாற்றிய திருமகன் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார், 1972-ல் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் சிரமங்களுக்கு ஆளாகி, தற்போது அவருடைய வாரிசுசுள் வறுமையில் வாடுவதாகப் முதல்வர் கவனத்துக்குச் செய்திகள் வந்துள்ளன.
இச்செய்திகள் குறித்து, மிகுந்த பரிவோடு பரிசீலனை செய்து, இவரது நூல்களை அரசுடைமையாக்குவதில் பிரச்சினைகள் இருப்பதால்; தற்போதுள்ள சூழலில் இவரது குடும்ப நிலை கருதி; அதற்காக உதவி புரியும் நோக்குடன் இவர் குடும்பத்துக்காக உதவி நிதியாக 10 லட்சம் ரூபாய் அரசின் சார்பில் வழங்கலாம்'' என தமிழக முதல்வர் கருணாநிதி (17.9.2010) ஆணையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிமண்டபம் அமைக்க கோரிக்கை:
இதற்கிடையே, பெருமழைப்புலவரின் பிறந்த ஊரில் ஒரு மணி மண்டபம் அமைத்து, அதனை முதல்வர் கருணாநிதியே திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்குப் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பெயரைச் சூட்டி அவரின் தமிழ்ப்பணியை என்றும் நினைவுகூரப் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்கலைகக்கழக துணைவேந்தருக்கும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
நன்றி: http://muelangovan.blogspot.com/