மகாதீபம் ஏற்றப்பட்டது-திருவண்ணாமலையில் லட்சக்ணக்கான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலையில் 10 நாட்களுக்கு கார்த்திகை தீப விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டும் பத்து நாள் திருவிழா கடந்த 12ம் தேதி தொடங்கியது.
முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.
முன்னதாக இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை 6 மணியளவில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து பக்தர்கள் தீப தரிசனம் கண்டு அண்ணாமலையாரை வணங்கினர். மேலும், மகா தீபம் ஏற்றப்பட்ட அதே நேரத்தில் வீடுகளில் மக்கள் கார்த்திகை தீபங்களை ஏற்றி வைத்தனர். இதனால் திருவண்ணாமலை முழுவதும் ஜோதி மயமாக காட்சி அளித்தது.
மகாதீபத்திற்காக கோவில் நிர்வாகம் சார்பில் 3,500 கிலோ நெய் வாங்கப்பட்டிருந்தது.
மகா தீபத்தைக் கண்டு அண்ணாமலையார் அருள் பெறுவதற்காக திருவண்ணாமலை சுற்று வட்டாரம் மட்டுமல்லால் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
60 கண்காணிப்பு கேமராக்கள் சகிதம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், கோவில் நிர்வாகம் சார்பில் 45 இடங்களில் எல்சிடி திரைகள் மூலம் தீபத்தைக் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.