29-ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித் திருவிழா தொடக்கம்: 11 நாட்கள் விழா
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழா வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இத் திருவிழா 29-ம்தேதி தொடங்கி அடுத்த மாதம் 9-ம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும்.
கொடியேற்றத்தையொட்டி வரும் 29-ம் தேதி அதிகாலை 1 மணி அளவில் திருக்கோவில் நடைதிறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறவுள்ளது. 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். இதைத் தொடர்ந்து மற்ற பூஜை காலங்கள் நடைபெற இருக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக செப்டம்பர் 2-ம் தேதி இரவு 7.30 மணிக்கு மேலக்கோவிலில் குடவருவாயில் தீபாராதனை நடைபெறுகிறது. செப்டம்பர் 4-ம் தேதி காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் திருக்கோவிலில் கடக லக்கனத்தில் அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நடைபெறவிருக்கிறது.
அன்று காலை 8.45 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் சண்முகவிலாச மண்டபத்தில் வெற்றிவேல் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தந்த பிறகு பிள்ளையன் கட்டளை மண்டபத்தை அடைகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கின்றது.
மாலை 4 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா வருகின்றார்.
செப்டம்பர் 5-ம் தேதி அதிகாலை சுவாமி பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு சுவாமி பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
செப்டம்பர் 7-ம் தேதி காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது. திருவிழா நாட்களில் திருக்கோவில் கலையரங்கில் காலையும், இரவிலும் திருமுறை இன்னிசை, பக்தி சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகின்றன.