ஆஜ்மீர் தர்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பட்டினி இருந்து மரணம்-10 பேர் கவலைக்கிடம்
ஆஜ்மீர்: ஆஜ்மீர் தர்காவில் கடந்த 38 நாட்களாக பட்டினியாக இருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இவர்களில் இருவர் சிறுவர்கள், பரிதாபமாக உயிரிழந்தவர். காஜா மொய்னுதீனின் கட்டளைப்படி தாங்கள் பட்டினி இருந்து வந்ததாக இவர்கள் முன்பு கூறியிருந்தனர். மேலும் 10 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மூவருமே அலகாபாத்தைச் சேர்ந்தவர்கள். இறந்தவர்கள் முகம்மது சலம் (14), நெளசர் (17), கெய்சர் (28) என்று தெரிய வந்துள்ளது.
தங்களது குடும்பத்தைப் பீடித்துள்ள சாத்தானிடமிருந்து விடுபடுவதற்காக காஜாவின் உத்தரவுப்படி தாங்கள் பட்டினி கிடக்கப் போவதாக 40 நாட்கள் இருக்கப் போவதாக கூறி, தர்கா வளாகத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.
38 நாட்கள் கடந்த நிலையில் 3 பேரின் நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தற்போது 2 சிறார்கள் உள்பட மேலும் 10 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத் தலைவர் முகம்மது முஸ்தபா (59) இதுகுறித்துக்கூறுகையில்,எங்களைப் பிடித்துள்ள சாத்தானிடமிருந்து விடுபடவும், எங்களுக்கு வைக்கப்பட்ட செய்வினையிலிருந்து விடுபடவும் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறோம். இதேபோல எனது சகோதரர் தனது குடும்பத்தினருடன் நான்கு ஆண்டுகளுக்கு முன்புசெய்தார். நானும் அப்போது உண்ணாவிரதம் இருந்தேன் என்றார்.
முஸ்தபா ஓய்வு பெற்ற மெர்ச்சன்ட் நேவி அதிகாரி ஆவார். முஸ்தபா கனவில் ஆஜ்மீர் காஜா வந்து உண்ணாவிரதம் இருக்குமாறு கூறியதாகவும், அதையடுத்தே குடும்பத்தோடு அனைவரும் உண்ணாவிரதத்தைத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் உண்ணாவிரதம் முடிய 2 நாட்களே உள்ள நிலையில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்திருப்பது முஸ்தபாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.