குமரியில் 40 வகை வெளிநாட்டு பறவைகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு
நாகர்கோவில்: குமரியில் 40 வகையைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் அக்டோபர் முதல் மார்ச் வரை பறவைகளுக்கு இதமான தட்பவெட்ப நிலை காணப்படுவதாலும், உலகிலேயே சிறந்த நன்னீர் புலம் என்பதாலும் இந்த காலகட்டதில் அதிகளவு வெளிநாட்டுப் பறவைகள் இங்கு வருகை தருகின்றன.
இந்த ஆண்டு பருவக் காலம் தொடங்க உள்ள நிலையில் தற்போது ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வந்துள்ளன. இங்கு வரும் வெளிநாட்டுப் பறவைகளின் வகைகள், அவற்றின் வாழ்க்கை முறை மற்றும் செல்லும் இடங்கள் ஆகியவற்றை கண்டறிதல் குறித்து வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மும்பை இயற்கை வரலாற்று ஆய்வு மையம் சார்பில் பறவைகள் ஆராய்ச்சியாளர் பாலச்சந்திரன் கடந்த 2 நாட்களாக பயிற்சி அளித்தார்.
தேரூர் மாணிக்கபேரி குளம், தத்தையார்குளம், மணக்குடி, சுசீந்திரம் குளம் போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் ஆய்வு செய்ததில் அரியவகை பறவை இனங்களான அன்றில், உல்லான், தேன்சி்ட்டு உள்ளிட்ட 40 வகைகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் வந்துள்ளது தெரிய வந்தது.