துபாயில் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக விழா: தமிழறிஞர்கள் பங்கேற்பு
துபாய்: பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அமீரக கிளையின் சிறப்பு விழா கடந்த மாதம் 25-ம் தேதி துபாய் லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் கவிஞர் மு.மேத்தா, கலாபூஷணம் மானா மக்கீன், டாக்டர். சே.மு. முஹம்மது அலி, டாக்டர் ஜின்னாஹ் சர்புத்தீன் மற்றும் சையத் முஹம்மது ஸலாஹுத்தீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
ஸலாஹுத்தீன் தனது உரையில், இலக்கியம் மற்றும் கவிதைகளால் மட்டுமே மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும், மாற்றங்களை கொண்டு வர முடியும். உம்மஹாத்துல் மூமினீன்கள் எனப்படும் நபிகளாரின் மனைவிமார்கள் பற்றிய விபரங்கள் மற்றும் சரித்திரத்தை என்னால் கூட முழுவதுமாக நினைவுபடுத்த முடியவில்லை. ஆனால், வீட்டில் உள்ள பெண்கள் "கிஸ்ஸா" எனப்படும் இலக்கிய ஏடுகளை படித்து விட்டு எல்லா விபரங்களையும் சொல்கின்றனர். சிறுவயதிலேயே எனது பெற்றோர் அகநானூறு, புறநானூறு, சீறாபுராணம் உள்ளிட்ட பல இலக்கிய நூல்களை என்னை வாசிக்கிச் செய்தனர். அதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டேன். அன்று படித்தாலும் இன்றும் மனதில் அவை பசுமரத்தாணி போல் உள்ளன. இன்றைய தலைமுறை பெற்றோர் தமது பிள்ளைகளை தமிழ் இலக்கிய நூல்களை வாசிக்கச் செய்ய வேண்டும். தமிழ் இலக்கியம் மேல் பற்று கொள்ளச் செய்து, தமிழ் மொழியின் வலிமையை உணரச் செய்ய வேண்டும் என்றார்.
பன்னாட்டு கட்டுரைப் போட்டியில் நாகர்கோவிலைச் சேர்ந்த அதாவுல்லாஹ் எம்.ஏ. அவர்கள் முதல் பரிசை பெற்றார்.
விழாவில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவை பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம், அமீரக கிளை செயலாளர் கலையன்பன் ரபீக் அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
முன்னதாக தமிழ்நாடு பொறியாளர் சங்கம் சார்பாக எம்.ஜே.எம். இக்பால் விழாவிற்கு தென்னிந்தியாவிலிருந்து வந்திருந்த அறிஞர் பெருமக்களை வரவேற்று கெளரவப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications