குவைத்தில் நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை, குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி

அதிகாலை 6:30 மணிக்கே மக்கள் சாரைசாரையாக வரத் தொடங்கினர். வருகை தந்த பெருமக்களை நறுமணம் பூசி, பேரீத்தம் பழம் அளித்து சங்கத்தின் நிர்வாகிகள் வரவேற்றனர். ஆலிம் பெருமக்கள் தக்பீர் சொல்ல, தொழுகைக்கு வந்தவர்களும் தொடர்ந்து தக்பீர் முழக்கம் எழுப்பிக் கொண்டே இருந்தனர். அப்பகுதியே தமிழ் இஸ்லாமிய மக்களின் வருகையால் விழாக்கோலம் பூண்டிருந்தது.
சரியாக காலை 7: 25 மணிக்கு சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைஃக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ அவர்கள் பெருநாள் தொழுகை, ஸதக்கத்துல் ஃபித்ர் (பெருநாள் தர்மம்) மற்றும் வாழ்த்துக்கள் கூறும் முறை போன்றவற்றை விளக்கமாக எடுத்துரைத்து, பெருநாள் தொழுகையை நடத்தி வைதது, நிகழ்ச்சியின் இறுதியில் துஆவையும் ஓதினார்.
தொழுகையைத் தொடர்ந்து சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ பெருநாள் குத்பா பேருரையை நிகழ்த்தினார். குத்பா முடிந்தவுடன் சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ. பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ. பெருநாளன்று செய்ய வேண்டியவை குறித்து சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து ரமலான் மாத கடைசி பத்து நாட்கள் நடத்தப்பட்ட கியாமுல் லைல் நிகழ்ச்சிகளில் நடைபெற்ற வினாடி வினா போட்டிகளிலும், திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டியிலும், குவைத் தேசிய அளவில் நடத்தப்பட்ட புனித ரமலான் இஸ்லாமிய பொது அறிவுப் போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சங்கத்தின் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் பரிசுகளை வழங்கினார்.
துஆ ஓதப்பட்டவுடன் வந்திருந்த பெருமக்கள் ஒருவருக்கொருவர் தங்களின் சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும், இஸ்லாமிய சகோதரர்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். முதல் முறையாக சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தச் சிறப்பு தொழுகை குறித்தும் மக்கள் மன நிறைவுடன் மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர்.
பெண்களுக்கு தனியிட வசதியுடன் தொழுகைக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர் சங்க நிர்வாகிகள். பெண்கள், குழந்தைகள் உட்பட ஏறக்குறைய ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகள் முடிவுற்றதும் அனைவருக்கும் சிற்றுண்டியும், குளிர்பானங்களும் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டன.
குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இதுபோன்ற செய்திகளை தெரிவிக்குமாறும், சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்குமாறும், சங்கப் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்க...
மேலதிக விபரங்களுக்கும், சங்க நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படுவதற்கும் தொடர்பு கொள்க:
துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
மின்னஞ்சல் முகவரிகள்: [email protected] / [email protected]
யாஹு குழுமம்: http: //groups.yahoo.com/group/K-Tic-group
இணையதளம்: www.k-tic.com












Click it and Unblock the Notifications