இன்று திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா: கிரிவலம் செல்லலாம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கிரிவலம் செல்வதற்கு இன்று உகந்த நாளாகும்.
இன்று (17-ந் தேதி) காலை 11.29 மணிக்கு தொடங்கிய சித்ரா பவுர்ணமி விழா நாளை ( 18-ந் தேதி) காலை 9.09 மணியுடன் நிறைவடைகிறது. எனவே கிரிவலம் செல்ல இன்று உகந்த நாளாகும்.
இந்த விழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவதால் அருணாசலேஸ்வரர், அம்மன் சன்னதிகளில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அதனால் யாரும் பரிந்துரைக் கடிதங்கள் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பக்தர்கள் கிழக்கு ராஜகோபுரம் வழியாகத் தான் கோவிலுக்குள் வர வேண்டும். தரிசனம் முடிந்து அம்மணி அம்மன் கோபுர வாயில் வழியாக வெளியே செல்லலாம்.
பொது தரிசன வழி, ரூ.20 கட்டண தரிசன வழி, ரூ.50 கட்டண தரிசன வழிகள் வழக்கம் போல் இயங்கும். பாதுகாப்பு காரணங்களுக்காக பக்தர்களின் உடைமைகளை போலீசார் சோதனையிடுவார்கள். கோவில் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக சென்னை மற்றும் இதர பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளது. இந்த தகவலை கோவில் இணை ஆணையர் பி.தனபால் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications