அதிகாரியை கண்டித்து பழக்கடை பெண் வியாபாரி சாகும்வரை உண்ணாவிரதம்
தூத்துக்குடி: தூத்துக்குடி உழவர்சந்தை அதிகாரியை கண்டித்து பழக்கடை பெண் வியாபாரி ஒருவர் தனது குடும்பத்தினருடன் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உழவர் சந்தை உள்ளது. இங்கு கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த குணசேகர் மனைவி வேலுசுந்தரி பழக்கடை வைத்துள்ளார். முறையாக அனுமதி பெற்று இதை நடத்தி வருகிறார். இவரது கடையில் உழவர் சந்தை அதிகாரி ஜெயபால் அடிக்கடி ஓசியில் பழங்களை எடுத்து சென்றுள்ளார். வேலுசுந்தரி அதற்குரிய பணம் கேட்டும் அவர் கொடுக்கவில்லை. இது நடந்ததால் வேலுசுந்தரி அவரிடம் வாக்குவாதம் செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அதிகாரி வேலுசுந்தரியை கடை வைக்கவிடாமல் தடுத்ததோடு அதற்குரிய அட்டையை புதுப்பித்து கொடுக்க மறுத்துள்ளார். அவரிடம் மன்றாடி கேட்டு பார்த்தும் அவர் வேலு சுந்தரியை கடை நடத்த அனுமதிக்கவில்லை என தெரிகிறது.
இது வேலுசுந்தரிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மீண்டும் கடை நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை அவர் தனது கணவர் மற்றும் 5 பெண் குழந்தைகளுடன் உழவர் சந்தையில் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் வடபாகம் போலீசார் மற்றும் அதிகாரிகள் வந்து வேலுசுந்தரியிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications