ஆடி அமாவாசை: சதுரகிரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு ஆடி அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இன்று ஆடிஅமாவாசை என்பதால் கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோயில் மலையடிவாரத்திலுள்ள தாணிப்பாறை பகுதியில் குவிந்துள்ளனர்.
மலையேறும் பக்தர்கள் தாணிப்பாறை வழியாகவும், சாப்டூர் வழியாகவும் சுந்தரமகாலிங்கம் கோவிக்கு வருவதால் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரிகரித்துள்ளது. அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் வரிசையில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்றும் நாளையும் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடல், தாணிப்பாறை விலக்கு, மகாராஜபுரம் விலக்கு, அழகாபுரி, கிருஷ்ணன்கோவில் உட்பட 35 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பாபநாசம் அருகில் உள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசையை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அங்கு பத்துநாட்கள் திருவிழா நடைபெறும் என்பதால் பல்லாயிரக்கணக்கானோர் அங்கு குவிந்துள்ளனர்.
ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது முக்கிய அம்சமாகும். இறந்த தேதியைப் பார்த்து திதி அளிக்க மறந்தவர்கள் ஆடி, தை மாத அமாவாசை நாட்களில் நதிகள், கடற்கரையோரங்களில் புரோகிதர் மூலமாக திதி கொடுக்கலாம். ஆடி அமாவாசை தினமான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். அதேபோல் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் புனித நீராடிய பக்தர்கள் எள், பச்சரிசி, தேங்காய் வைத்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடலிலும் ஏராளமானோர் புனிதநீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
ஆடி அமாவாசையான இன்று புரோகிதருக்கு தேங்காய், பழம், அரிசி, காய்கறிகள், வேட்டி, துண்டு போன்றவற்றை தானமாக அளிக்க வேண்டும். அத்துடன் ஏழைகளுக்கு அன்னதானமும், உதவியும் வழங்கலாம். அவர்கள் நினைவாக பல நற்செயல்களை செய்யலாம். இதனால் வருங்கால சந்ததிகள் நலமுடன் இருக்கும் என்பது நம்பிக்கை.












Click it and Unblock the Notifications