வாராரு வாராரு அழகர் வாராரு…..
காணும் திசை எங்கும் கோவிந்தா முழக்கம். விண்ணை பிளக்கும் அதிர்வேட்டுகள் மதுரை நகர் வரை எட்டியது. சித்திரை திருவிழாவைக்கான தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திக்கும் பக்தர்களுக்கு அந்த சப்தம் அழகரின் புறப்பட்டை உணர்த்தியது.
தங்கை மீனாட்சியின் திருமணத்தைக்காண வரும் அழகர் திருமணம் முடிந்துவிட்டதால் வருத்தத்துடன் வைகை ஆற்றில் இறங்குகிறார். அப்போது மாண்டூகமாக மாறி காத்திருக்கும் மகரிசிக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். இது ஆண்டுதோறும் நிகழும் நிகழ்வுதான் என்றாலும் மலையிலிருந்து இறங்கி வரும் கள்ளழகரின் அழகைக்கான மதுரை நகரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
கோவிந்தா முழக்கம்
தனக்காக காத்திருக்கும் பக்தர்களைக் காண அழகரும் கண்டாங்கி பட்டுடுத்தி தங்கப்பல்லக்கில் அழகர்கோவிலில் இருந்து அதிர்வேட்டு முழங்க பக்தர்களின் கோவிந்தா முழக்கத்துடன் கோயிலை விட்டு வெளியே வந்தார். முதலில் வெள்ளையன்குன்றம் சண்முகராஜா, கூட்டு வண்டியில் முரசு அடித்து கொண்டு முன்னே செல்ல குட்டி யானை சுந்தரவள்ளி, அதனை தொடர்ந்து தனது பரிவாரங்களுடன் மதுரை நோக்கி கள்ளழகர் புறப்பட்டார்.
கோயில் கோட்டை வாசலை விட்டு வெளியே வந்த கள்ளழகர் பின்பு கருப்பணசாமி கோயில் அருகேயுள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார்.அங்கு சிறப்பு பூஜைக்கு பின் இரவு 7 மணி அளவில் புறப்பட்டு பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி வழியாக சுந்தர்ராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் நள்ளிரவு 1 மணிக்கு எழுந்தருளினார். மீண்டும் 2 மணி அளவில் புறப்பட்ட கள்ளழகர் காதக்கிணறு, கடச்சனேந்தல், சர்வேயர் காலனி வழியாக மூன்று மாவடிக்கு வந்தார். அங்கு காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு எதிர்சேவை செய்தனர்.
பக்தர்கள் நடனம்
மதுரை நகருக்குள் வரும் அழகரை இன்று காலை முதல் இரவு வரை ஆங்காங்கே மண்டகப்படி அமைத்து எதிர்கொண்டு வரவேற்று தங்களின் பக்தியை வெளிப்படுத்துகின்றனர் பக்தர்கள். கள்ளழகரின் மேல் அன்பு கொண்ட பக்தர்கள் தாங்களும் கள்ளழகர் போல வேடமிட்டும், கருப்பண்ணசாமியாக வேடமிட்டு அழகரை வரவேற்று ஆடி பாடி மகிழ்கின்றனர். இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் எழுந்தருளும் அழகருக்கு அங்கு திருமஞ்சனம் நடைபெறும்.
ஆண்டாள் மாலை
வைகை ஆற்றில் இறங்கும் அழகருக்கு ஆண்டுதோறும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை சாத்தப்படும். பின்பு தங்க குதிரை வாகனத்தில் இரவு 12 மணிக்கு புறப்படும் கள்ளழகர் 2.30 மணி அளவில் கருப்பணசாமி கோயிலில் உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருகிறார். அங்கிருந்து புறப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் ஞாயிறுக்கிழமை காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் இறங்குகிறார்.
வீரராகவப் பெருமாள் எதிர்சேவை
கள்ளழகரை வெள்ளி குதிரை வாகனத்தில் வரும் வீரராகவ பெருமாள் எதிர் கொண்டு வரவேற்பார். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்குவதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் கூடியுள்ளனர். அழகரின் வருகையை ஒட்டி அழகர்கோவில் சாலையில் போக்கு வரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தண்ணீர் திறப்பு
வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளுவதை ஒட்டி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வைகை ஆறு ஓடும் ஊர்களான போடி, மானாமதுரை ஆகிய ஊர்களிலும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ஞாயிறுக்கிழமையன்று நடைபெற உள்ளது.