டல்லாஸ் திருக்குறள் போட்டியில் கண்ணதாசன் கொள்ளுப் பேத்தி சாதனை!

இருநூறு திருக்குறள்களை அதற்கான அர்த்தத்துடன் கூறி அவரது முந்தைய ‘ நூறு திருக்குறள்கள்’ சாதனையை முறியடித்துள்ளார்.
பிப்ரவரி 11, சனிக்கிழமை காலை 8.30 மணி அளவில் ப்ளேனோ ஆல்ஃபா மாண்டெசரி பள்ளியில் நடைபெற்ற திருக்குறள் போட்டியில் 160 அமெரிக்க தமிழ் குழந்தைகள் பங்கேற்றனர். பெற்றோர்களும் பார்வையாளர்களாக அமர்ந்திருந்து திருக்குறள் கேட்டு பரவசமடைந்தனர்.
குழந்தைகள் அனைவரும் சேர்ந்து 2300க்கும் அதிகமான குறள்களை கூறிய மூன்று மணி நேரமும் அந்த பள்ளி வளாகம் முழுவதும் திருக்குறள் திருமந்திரமாக ஒலித்தது.
சாதாரணமாக ‘திருக்குறள்’ என்ற வார்த்தையை கூட சொல்ல சிரமப்படும் இரண்டு வயது குழந்தையும் முழுமையாக சொன்னது குறிப்பிடத்தக்கது.
ஒரு சில குழந்தைகள் உடல் நிலை சரியில்லாத நிலையிலும் போட்டியில் பங்கேற்றனர்.
திருவள்ளுவர் திருவிழா
மாலை ஆறு மணிக்கு டல்லாஸ் ஃபாரஸ்ட் லேனில் அமைந்துள்ள யூனிட்டி சர்ச் வளாக அரங்கத்தில், போட்டியாளர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்ட பரிசளிப்பு விழா, இயல் இசை நாடகம் என முத்தமிழும் கலந்த திருவள்ளுவர் திருவிழாவாக நடந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமான விழாவில் சாஸ்தா தமிழ் ஃபவுண்டேஷன் வேலு வரவேற்றார்.
தொடர்ந்து கவிரசர் கண்ணதாசன் வரிகளில் உருவான ‘அணுவைத் துளைத்து ஏழ்கடலை புகுத்தி’ என்ற திருக்குறள் பெருமை போற்றும் பாடலுக்கு அன்னபூரணி நடனம் அமைக்க ப்ளேனோ தமிழ்ப்பள்ளி மாணவிகள் நடனமாடினர்.
அடுத்ததாக போட்டியாளர்களாக இல்லாமல் சுய விருப்பத்துடன் கலந்து கொண்ட ஐந்து வயதுக்குட்பட்ட மழலைகள் சிறப்பிக்கப்பட்டார்கள். இவர்களில் ஒருவரான அபிராமி ஐம்பது குறள்கள் சொல்லி அனைவரையும் மிகவும் ஆச்சரியப் படுத்தினார்.
நாடகம்
கோப்பல் தமிழ் கல்வி மையத்தின் மாணவர்கள் பங்கேற்ற ‘வாழ்வாங்கு வாழ்பவன்’ என்ற நாடகத்தில் பத்து திருக்குறளுக்கு அர்த்தம் கொடுக்கும் வகையிலும் அமெரிக்க தமிழ்க் குடும்பத்தில் நடப்பது போன்ற எதார்த்த்துடனும் இருந்தது. ஏனைய டல்லாஸ் தமிழ்ப் பள்ளிகளான டி.எப்.டபுள்யூ இந்து கோவில் வித்யா விகாஸ் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் ‘தண்டனை’, பாலதத்தா தமிழ்ப்பள்ளி, கொங்கு தமிழ்ப் பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற திருக்குறள் நாடகங்களும் நடத்தப்பட்டது. ப்ளேனோ தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நடத்திய ‘கொளமாஞ்சி’ என்ற வினோதமான திருக்குறள் போட்டியுடன் கூடிய நாடகம் புதிய சிந்தனையை தூண்டும் விதத்தில் அமைந்திருந்தது.
பள்ளிகள் சார்பில் ராம்கி, ஆனந்தி, கீதா சுரேஷ், பழனிசாமி, டாக்டர் பிரபாகரன் ஆகியோர் நாடகத்தை வடிவமைத்து இயக்கி இருந்தார்கள். அமெரிக்க தமிழ் குழந்தைகளின் பல்வேறு பரிமாணத்தை எடுத்துக்காட்டும் வகையில் மாணவ, மாணவிகள் அற்புதமாகநடித்திருந்தார்கள்.
சாலமன் பாப்பையா
இந்த நிகழ்ச்சிக்கு, திருக்குறள் உரை தந்த பேராசிரியர் சாலமன் பாப்பையா வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.
"எந்த நாட்டில் வசித்தாலும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் முக்கியம். அதுவும் மாணவச் செல்வங்களுக்கு. இந்த உலகில் ஒழுக்கத்துக்கு முதல் இலக்கணம் வகுத்தவர் என்றால் அவர் திருவள்ளுவர்தான். அவர்தான் இந்த விஷயத்துக்கு முதல் ஆசான்," என்று அவர் கூறியிருந்தார்.
அமெரிக்கா வாழ் தமிழ் அறிஞர் கரு. மலர்ச் செல்வன் அவர்கள் ஹூஸ்டனில் இருந்து வந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மஹாத்மா காந்திக்கு அஹிம்சையை போதித்த அவரது குருவான ரஷ்ய அறிஞர் லியோ தோல்ஸ்டாய் (Leo Tolstoy) அஹிம்சையும் அன்பையும் கற்றுக்கொண்டது நம்ம திருவள்ளுவரின் திருக்குறளில் இருந்து தான், என்ற அஹிம்சையின் மூலாதாரத்தை சொன்ன போது அரங்கம் அதிர்ந்தது.
பரிசுகளை மஹாலட்சுமி, பழனிசாமி, முத்துக்குமார் மற்றும் சிறப்பு விருந்தினர் கரு. மலர்ச் செல்வன் ஆகியோர் வழங்கினர். திருக்குறளை மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதுதான் என்ற நோக்கத்தில் நடைபெறும் விழா என்பதால், பங்கேற்றோர் அனைவருமே வெற்றியாளர்கள் தான் என்ற அடிப்படையில் எல்லோருக்கும் பணமுடிப்பு வழங்கப்பட்ட்து.
பரிசுகள் விவரம் - முதல் நிலை ( 5 முதல் 7 வயது)
கிறிஸ்டோபர் குருஸ் - முதல் பரிசு
நந்தினி இளங்கோவன் - இரண்டாம் பரிசு
அஜய் வெங்கட் - மூன்றாம் பரிசு
இரண்டாம் நிலை( 8 முதல் 11 வயது)
சீதா ராமசாமி - முதல் பரிசு
அனுஸ்ரீ ராம்மூர்த்தி - இரண்டாம் பரிசு
அம்ரிதா மஹேந்திரமணி - மூன்றாம் பரிசு
மூன்றாம் நிலை( 12முதல் 15 வயது)
நிவேதா சுப்ரமணியன் - முதல் பரிசு
வருண் ரவி - இரண்டாம் பரிசு
திவ்யா பிரபாகரன் - மூன்றாம் பரிசு
சாஸ்தா தமிழ் ஃபவுண்டேஷன் வேலு மற்றும் விசாலாட்சி வேலு நன்றி கூறினர். விழாவை, தமிழ்மணி, வெங்கடேசன், ரவி நடராஜன், விசாலாட்சி, அருண்குமார், டாக்டர் தீபா, கவிதா, டாக்டர் ராஜ், முத்தையா, முத்துக்குமார், ராஜாமணி, சேரன், டாக்டர் வைரவன், மஹாலட்சுமி, முத்துக்குமார், ஜெய்சங்கர், பழனிசாமி, ஸ்ரீகாந்த்.
பால்பாண்டியன், மனோகர், புவி மனோகர், கொங்கு தமிழ்ப் பள்ளி, வடிவு ரமேஷ், மற்றும் என்வழி நண்பர்கள், தன்னார்வ அமைப்பினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications