திருச்செந்தூரில் நாளை தைப்பூசத் திருவிழா: அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் நாளை தைப்பூச திருவிழா கோலாகலமாக நடக்கவிருக்கின்றது. இதை முன்னிட்டு பாதயாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை நடக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனை, 4 மணிக்கு அபிஷேகம், 5 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. காலை 8 மணிக்கு அஸ்திரதேவருக்கு கடலில் தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
உச்சிகால தீபாராதனைக்கு பிறகு சுவாமி அலைவாயுகாத்த பெருமாள் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தை அடைகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி உள்மாட வீதிகளில் உலா வந்து கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
தைப்பூசத்தை முன்னி்ட்டு நெல்லை, பாபநாசம், விகேபுரம், பாவூர்சத்திரம், தூத்துக்குடி, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து அழகு குத்தியும், காவடி ஏந்தியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.