துபாயில் நடந்த வானலை வளர்தமிழின் இலக்கிய கூட்டம்
துபாய்: துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 56வது மாத இதழான “கனவு” சிறப்பிதழ் வெளியீடு மற்றும் கவியரங்கம் நிகழ்ச்சி 24.02.2012 அன்று காலை 9.30 மணியளவில் துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது.தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் அமைப்பின் இணைச் செயலாளர் கீழை ராஸா வரவேற்புரையாற்றினார். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் பொன் முத்தையன், சத்யம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் ஜெபக்குமார், அஸ்கான் திட்ட மேலாளர் சு. கணேசன் ஆகியோர் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் சிவ்ஸ்டார் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.
நர்கிஸ் ஜியா தம்பதிகள் இருவரும் இணைந்து கவியரங்கினை நடத்தித் தந்தனர். கவியரங்கில் காவிரிமைந்தன், சந்திரசேகர், ஜெயராமன் ஆனந்தி, சிம்மபாரதி, புதுவை ரமணி, ஜெயா பழனி, குற்றாலம் அஷ்ரப் அலி, எக்ஸலன்ட் முருகேசன், முத்துப்பேட்டை அ.சர்புதீன், விருதை மு.செய்யது உசேன், முஹைதீன், கீழை ராஸா, நர்கீஸ் ஜியா, ரஃபீக் மற்றும் ஜியா ஆகியோரின் கவிதைகள் இடம் பெற்றன.
அமைப்பின் ஆலோசகர் காவிரிமைந்தன் நிகழ்ச்சித் தொகுப்புரையாற்றினார்.
அதனைத் தொடந்து சிறப்பு விருந்தினர்கள் பொன் முத்தையன் அவர்களுக்கு வானலை வளர்தமிழ் தலைவர் கோவிந்தராஜ் பொன்னாடை அணிவிக்க, நினைவுப் பரிசினை வெற்றிவேல் செழியன் வழங்கினார். சதயம் டிவி ஜெபக்குமார் அவர்களுக்கு அமைப்பின் செயலாளர் சிம்மபாரதி பொன்னாடை அணிவிக்க, நினைவுப் பரிசை ஜியாவுதீன் வழங்கினார். சு.கணேசன் அவர்களுக்கு சந்திரசேகர் பொன்னாடை அணிவிக்க, நினைவுப் பரிசை கோபி வழங்கினார்.
நிகழ்ச்சியில் கனவு மற்றும் ஆற்றல் ஆகிய இரண்டு இதழ்கள் வெளியிடப்பட்டன.
கனவு இதழின் முதல் பிரதியை பேராசிரியர் பொன். முத்தையன் வெளியிட ஹனீபா பெற்றுக் கொண்டார். இரண்டாம் இதழை ஜெபக்குமார் வெளியிட புதுவை ரமணி பெற்றுக் கொண்டார். ஆற்றல் இதழின் முதல் பிரதியை தலைவர் கோவிந்தராஜ் வெளியிட குற்றாலம் அஷ்ரப் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
பொன் முத்தையன் அவர்கள் இளைஞர்களின் திறமைகளை வெகுவாக புகழ்ந்துரைத்தார். உழைப்பு பாராட்டத்தக்க அளவில் இருந்தாலும் உண்மை மட்டுமே சற்று குறைகிறது என்று குறிப்பிட்டார். மாறிவரும் பல்வேறு சூழ்நிலைகளில் மாற்றத்தை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இல்லையென்றால் மாற்றம் நம்மை நிராகரித்துவிடும் என்று கூறினார். மேலும் கடந்த 5 ஆண்டுகளாக ஒரு இலக்கிய நிகழ்வு தாயகத்தை விட்டு வெளிநாட்டில் மாதந்தோறும் சிறப்பிதழுடன் நிகழ்ந்து வரும் சாதனை வேறு எங்கும் நடக்கவில்லை என்பதனை குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெபக்குமார் அவர்கள் அயலகத்தில் அல்லலுறும் தமிழர்களின் அவலநிலை போக்க தன்னால் ஆனதை செய்து வருவதாகவும் அதற்காகவே தொலைக்காட்சி செய்தி சேனல் ஆரம்பித்து மக்கள் சேவையாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
மற்றுமொரு சிறப்பு விருந்தினர் திரு.சு.கணேசன் தனது உரையில், வாழ்க வளமுடன் என்பதை விட வாழ்க நலமுடன் என்பதை வலியுறுத்தினார். அண்மையில் தாயகம் சென்று திரும்பியபோதுகூட மருத்துவமனைகள் பெருகியிருப்பதையும், அவற்றில் கூட்டம் நிரம்பி வழிவதையும் வருத்தத்தோடு கூறினார். உடல் நலனில் ஒவ்வொருவரும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தக் கருத்தையொட்டி, தலைவர் கோவிந்தராஜ் அவர்கள் ஒரு வாகனம் என்றால் கூட இத்தனை கிலோமீட்டருக்குப் பிறகு ஒரு சர்வீஸ் என்று வைத்திருக்கிறோம். ஆனால் மனிதர்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துவது இல்லையே என்று குறிப்பிட்டார்.
இறுதியாக கிளியனூர் இஸ்மத் அவர்கள் நன்றியுரையாற்றினார். காவிரிமைந்தன், சிம்மபாரதி, கீழை ராஸா, ஜியாவுதீன் மற்றும் ஆதிபழனி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.