துபாயில் தமிழ்த்துளி அமைப்பு நடத்திய பொங்கல் விழா

விழாவுக்கு தமிழ்த்துளி அமைப்பின் தலைவி பிரியா ராஜன் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில், தமிழ்த்துளி அமைப்பு குழந்தைகள் தமிழ் மொழியில் பேச வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் அமைப்பு. பெற்றோர்கள் இந்த நோக்கம் நிறைவேற முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பாலாஜி பாஸ்கரன் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்த்துளி அமைப்பின் சேவைகளை நினைவு கூறும் வண்ணம் விருதை மு. செய்யது ஹுசைன் பாடிய பாடல் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.
சிறப்பு விருந்தினராக ஜெயா தொலைக்காட்சியின் முன்னாள் செய்தி வாசிப்பாளரும், குழந்தைகளின் திறன்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சியளித்து வரும் ரஃபீக் சுலைமான் பங்கேற்றார். அவர் தனது சிறப்புரையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் எத்தகைய துறையில் ஆர்வம் கொண்டுள்ளார்களோ அத்தகைய துறையில் அவர்களது கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் வாழ்வில் உயர்நிலையை அடைந்து வெற்றியாளராக வலம் வருவர் என்பதில் சந்தேகமில்லை என்பதனை எடுத்துக்காட்டுடன் விவரித்தார்.
அமெரிக்க அதிபரின் மனைவிக்கு உடைகளை வடிவமைப்பவர் தைவான் நாட்டைச் சேர்ந்த 27 வயது இளைஞர். அவர் தனது இளம் வயதில் பேஷன் டிசைனில் ஆர்வமுடன் இருந்ததை அறிந்து அவரது பெற்றோர் அதனைப் படிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த காரணத்தினால் உயர்நிலையினை அடைந்துள்ளார்.
தொடர்ந்து விருதை மு. செய்யது ஹுசைன், முதுவை ஹிதாயத், ரஃபீக் சுலைமான் ஆகியோருக்கு பிரியா, பிரசன்னா, ரமணி ஆகியோர் பூங்கொத்து வழங்கி கௌரவித்தனர்.
குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பொங்கல், மாட்டுப் பொங்கல் உள்ளிட்டவை குறித்த தகவல்களை பாவை நியாஸ் வழங்கினார். விரைவில் உறுப்பினர்களுக்கான சிறப்பு சுற்றுலா ஒன்றும் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மாயா தமிழ்ச் செல்வன் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரியா, ரமணி, பாலாஜி பாஸ்கரன், பாவை நியாஸ், மாயா தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications