இன்று உள்ளம் கவர் கண்ணனின் பிறந்தநாள்
சென்னை: ஆயர்பாடி மாளிகையில் தவழ்ந்து... யாதவர்களின் வீடுகளில் வெண்ணெய் திருடி உண்ட உள்ளம் கவர் கள்வன் கண்ணனின் பிறந்தநாள் இன்று இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
ஆவணித்திங்கள், அஷ்டமி நாளில், கிருஷ்ணர் அவதரித்தார் என்பது நம்பிக்கை. எனவே இந்த நாளை இந்துக்கள் ஜென்மாஷ்டமியாக கொண்டாடுகின்றனர்.
கண்ணன் பிறந்த இடம் சிறைச்சாலை. தாய்மாமன் கம்சனிடம் இருந்து காக்க வேண்டி அடைமழையில் நாகதேவன் குடை பிடிக்க ஆயர்பாடிக்கு கொண்டு சென்று யாசோதையிடம் அளித்தார் வசுதேவர். அதுமுதல் யாதவர்களின் மனம் கவர்ந்த நாயகனாக மாறிப்போனான் கண்ணன்.

பிஞ்சு பாதம்
ஜென்மாஷ்டமி நாளில் வீடுகளை சுத்தம் செய்து அலங்கரித்து அரிசி மாவில் பிஞ்சுபாதம் வரைந்து கிருஷ்ணரை வரவேற்கின்றனர்.

பால கிருஷ்ணன்கள்
வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு கிருஷ்ணர் வேடம் அணிவித்து பெண் குழந்தைகளை கோபியர்களை போல அலங்கரிக்கின்றனர்.

முறுக்கு, சீடை
கிருஷ்ணருக்கு பிடித்தது வெல்லச்சீடை, உப்புச்சீடை, தட்டை, முறுக்கு, தேன்குழல், வெண்ணெய், நாவல்பழம், பால் பாயாசம், லட்டு, வடை இந்த பலகாரங்களை வீட்டில் செய்தோ கடைகளில் வாங்கியோ கிருஷ்ணன் படத்தின் முன்பு படைக்கின்றனர்.

கிருஷ்ணன் துதி
பூஜையின் போது விஷ்ணு சகஸ்ரநாமம், கிருஷ்ணதுதி பாடல்கள் பாடப்படும்.

உரியடித்தல்
கிருஷ்ணன் வெண்ணை திருடும் வீடுகளில் நண்பர்களின் உதவியோடு மேலேறி உரியில் இருந்து வெண்ணெய் எடுப்பான். இதை நினைவு படுத்தும் வகையில் உரியடித்திருவிழா நடைபெறும்.

கோபியர்கள் கோலாட்டம்
பெண் குழந்தைகள் அழகாய் அலங்கரித்து கோலாட்டம், கும்மியாட்டம் ஊஞ்சலாடி ஜென்மாஷ்டமியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

பிருந்தாவனில் உற்சாகம்
கிருஷ்ணன் அவதரித்த, விளையாடிய இடங்களான மதுரா, பிருந்தாவனத்தில் உற்சாகமாக ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications