அசத்தலான தமிழ்நாடு அறக்கட்டளை ஹூஸ்டன் கிளையின் இணைய வழி குழந்தைகள் தின நிகழ்ச்சி
ஹூஸ்டன்: அமெரிக்காவின் தமிழ்நாடு அறக்கட்டளை - ஹூஸ்டன் கிளையானது இணையம் வழியாக குழந்தைகள் தின நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியது.
தமிழ்நாடு அறக்கட்டளை - ஹூஸ்டன் ஏற்பாடு செய்த இந்த விழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்றனர். சுமார் நான்கு மணி நேரம் தங்கு தடை இன்றி ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த கிளையின் சார்பாக, "வர்ண ஜாலம்" சிறார்கள் வண்ணம் தீட்டும் போட்டி, "ஆடல் அரங்கம்" நடனப்போட்டி, "இசையருவி" பாட்டு போட்டி, மற்றும்பெரியவர்களுக்கு கோலப்போட்டியும், கருத்தரங்கமும் நடத்தப்பட்டன. வயது வாரியாக (8-13; 14-18) நடத்தப்பட்ட இசையருவி போட்டியின் வெற்றியாளர்களை சூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகன் அவர்கள் தேர்ந்தெடுத்தார்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஹூஸ்டன் கிளையின் தலைவி திருமதி மாலா கோபால் அனைவரையும் வரவேற்று, தமிழ்நாடு அறக்கட்டளையின் துவக்கம் மற்றும் குறிக்கோள்களை விவரித்தார். இவரை தொடர்ந்து செயலாளர் டாக்டர் நளினி பாலச்சந்திரன் ஹூஸ்டன் கிளையின் தனித்துவம், சிறப்பு அம்சங்கள், ஆகியவற்றை விளக்கினார்.
காசாளர் திருமதி புனிதா தங்கராஜ் அவர்கள் கிளையின் வரவு செலவு மற்றும் நன்கொடை மூலம் சேரும் நிதியை பற்றி விவரித்தார். இந்த குழந்தைகள் தின நிகழ்ச்சியை ஒரு நிதி திரட்டும் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜூம் செயலியின் மூலமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இணையம் வழியாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக "2021ஆம் ஆண்டு எப்படி இருக்கும்" என்ற கருத்தரங்கம் அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.