For Daily Alerts
Just In
தேடிக் கொண்டிருக்கிறேன்- ஈழநாதன்
தேடாதீரென மடலெழுதி
நள்ளிரவில் கரைந்த
அக்காவை,
தேடிக்கொண்டிருக்கிறேன்.
கைக்கு
அரைத்திட்டு அழகுபார்க்க
காட்டில்
மருதாணி இருக்குமா
கேட்கவேண்டும்.
இரவில்
ஒண்ணுக்குப் போவதற்கு
என்னைப்போல்
யார் துணை வருவார்?
அப்பாவுடன்
அடிபட்டு வாங்கிய
காதுத் தோட்டை,
ஏன்
கழற்றிவிட்டுப் போனாள்?
செத்துப்போன பூனைக்குட்டிக்கு
மூன்றுநாள்
உண்ணாவிரதமிருந்தவள்
தோழியர் சாவுக்கு
என்ன செய்வாள்?
இப்போதும்
சின்னச் சின்ன
சண்டைகளுக்காக
யாருடனாவது
நாட்கணக்கில் பேசமாட்டாளா?
பரம எதிரி
கரப்பான் பூச்சிகளுடன்
எப்படி
ஒப்பந்தம் செய்திருப்பாள்?
ஒவ்வொருமுறையும்
தலைக்கு மேல்
குண்டுகள் பாயும்போது
ஆலடிப் பிள்ளையாருக்கு
நேர்த்தி வைப்பாளா?
இரத்தத்தைப் பார்த்து
எப்போதும் போல
மயங்கி விழுவாளா?
விடைகாணா வினாக்களுடன்
தேடாதீரென மடலெழுதி
திடீரெனக்
காணாமற்போன
அக்காவை,
தேடிக் கொண்டிருக்கிறேன்.
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]