கூனற் கிழவனும், தேவதைகளின் பெருநாளும்- ஈழநாதன்
வராமல்
எங்கே போய்விடும்
வருடத்தின் பெருநாட்கள்?
நேற்றும்
இன்றும்
வந்ததைப் போலவே
இனி,
நாளையும்
வரத்தான் செய்யும்.
கூன் விழுந்த
கிழவனின்
பிடிசாபத்துக்கும்
முகஞ்சுழிப்புக்கும்
அஞ்சாத தேவதைகள்,
பெருநாட்களை
மீண்டும் அழைத்துவரும்.
காலைச் சாப்பாட்டிற்காய்
கடை வாசலில் நிற்கும்
கிழவன் பற்றி
அவைகளுக்கென்ன கவலை?
பல்லிடுக்கில்
ஒட்டவும் காணா
பருக்கைச் சோற்றுடன்
முந்தைய நாளையும்
அதுவுமில்லா
நேற்றையும்
கழித்துவிட்ட கிழவனுக்கு,
பெருநாளுக்காய்ப் பூட்டிய
கடைகளுக்கும்
பிச்சையிடாப்
பெருமக்களுக்கும்
சேர்த்து வைத்து,
இன்றையச் சோற்றுக்கு
உலை வைத்த
பெருநாளையும்
தேவதைகளையும்
திட்டத்தான் முடியும்.
தேவதைகள் என்ன செய்யும்
எல்லோரும்
இன்புற்றிருக்கவன்றி
ஏதுமறியாத் தேவதைகள்
பெருநாட்களை
மீண்டும் அழைத்து வரும்,
நேற்றைப் போல்
இன்றும்
பசித்திருக்கும்
கிழவனுக்குப் பயந்து
வராமல் போய்விடுமா
வருடத்தின் பெருநாட்கள்.
- ஈழநாதன் ([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.