For Daily Alerts
Just In
கொடுத்து வைத்தவள்- ஈழநாதன்
பாட்டி செத்துப்போய்
பன்னிரண்டு மணிகழித்து,
பூட்டிய வீடுடைத்துப்
பார்த்தார்கள் பிணத்தை.
வெள்ளாடையும்
நரைதலையும்
வெள்ளிக்கிழமை விபூதியுமாய்
செத்துப் போய்விட்டிருந்தாள்
பாட்டி.
வெளிநாட்டு மகன்களுக்கு
தொலைபேசி வந்தவர்கள்
இரவற் கொள்ளிக்கு
ஆளைத் தேடினர்.
வெளிநாட்டுக் காசு
உள்ளூர் ஆட்கள்
அலங்கார மாலைகள்
அதிரும் பறையுடன்,
மயானம் போனாள்
பாட்டி
கொடுத்து வைத்த கிழவி
சாவில் கூட
ராசமரியாதை
பொருமிக் கொண்டது
ஊர்
பாட்டி
அடிக்கடி படிக்கும்
பகவத் கீதைக்குள்
தன் சாவுக்காவது
மகன்களை
வரும்படி எழுதி
மடித்து வைத்த கடிதத்தை,
கடைசி வரை
யாரும்
படிக்கவேயில்லை;
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]