திருவிழாவில் தொலைந்த தேவதை
சண்டையிட்ட தலைவர்கள் கூடி
சமாதானத் தேவதைக்கு
திருவிழா நடத்தினர்.
ஆண்டாண்டு காலமாய்
அடைத்துக் கிடந்த
கர்ப்பக் கிரகத்தின்
கனகமணிக் கதவங்கள்
அகலத் திறந்தன.
இரத்த வெடிலடிக்கும்
சுவர்களும் கூரையும்
சுரண்டப்பட்டு
வெள்ளையேறின.
நிணம் வடிந்த
தூண்டாமணி விளக்கு
புளி போட்டு விளக்கி
பளபளத்தது.
அகிற்புகை
சாம்பிராணிப்புகையால்
மூலையில் ஒளிந்தது
கந்தக வாசம்.
தங்களால் வெட்டப்பட்ட
தலைகளை மறைப்பதில்,
தலைவரும் தொண்டரும்
போட்டி போட்டனர்.
வெளவால் தூங்கிய
கர்ப்பக் கிரகம்
வெள்ளைக்கொடிகளால்
அலங்காரம் பெற்றது.
வெட்டித் தொங்கிய
சிறகுகள் ஒட்டி,
சீர் செய்யப்பட்டது
சமாதானப் புறா.
"இதுவரை காலமும்
தடைப்பட்ட சமாதானம்
எங்களால் தான்
உயிர்பெற்றெழுந்தது"
எதிர்ப்பக்கத் தலைவரின்
பேச்சுக்கு எதிர்ப்பாய்
மறுப்புரை வந்தது
மறுபக்கமிருந்து.
இடையிடை சண்டையில்
அகப்பட்டிறந்த
மக்களுக்காகவும்,
மாறி மாறி
குற்றஞ் சாட்டினர்.
தலைவர்களின் பேச்சுக்கு
தொண்டர்கள் கொந்தளிக்க
மீண்டும் அரங்கேறியது
கலம்பகம்
சண்டையின் முடிவில்
சிறகுகள் பிய்ந்து
சிதைந்து கிடந்தது
சமாதானப்புறா!
கலம்பகம் முடிந்து
கணக்கிட்ட போது
தொலைந்து போயிருந்தாள்
சமாதானத் தேவதை!












Click it and Unblock the Notifications