நீள்கிறது கவலை
மதமும்
மதத்தால் வரும் மதமும்
இல்லாத என்
எதிர்காலத் தோழன்
என்னபாடு படுவான்!
"எங்கும் இருக்கிறான்
இறைவன்
எல்லாமாகவும் இருக்கிறான்
இறைவன்" - விடு என்னை
என்பவனை
என்னபாடு படுத்தும்
இந்த உலகம்!
இறைவன் இருக்கிறான்
என்பதை விடவும்
அவன்
எப்படி இருக்கிறான்
என்பதே முக்கியம்
எப்படி இருக்கிறான்
என்பதை விடவும்
அவன்
எந்த மதத்தினன் என்பது
இன்னும் முக்கியம்
"மதமில்லாத இறைவனா"
உன்னை மன்னிக்க மாட்டோம்
இறைவனில்லாத
மதமிருக்க முடியும்
மதமில்லாத
இறைவனிருக்க முடியாது
மதமில்லாத ஓர்
இறைவனை நம்பும்
உன்னை விடவும்
இறைவனே இல்லை என்பவன்
தெளிவானவன்
"ஒன்று
இறைவனை இல்லையென்று சொல்
அல்லது
அவன்
எந்த மத்தினன் என்று சொல்"
மதமில்லாத இறைவன்
எனச் சொல்லும் உன்னையும்
மதமில்லாத இறைவனையும்
மன்னிக்க மாட்டோம்.
மதமில்லாத மனிதனுக்கு
எதிர்காலம் உண்டா?
மதமில்லாததோர்
எதிர்காலம்தான் உண்டா?
பிச்சினிக்காடு இளங்கோ