For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழா!

By Staff
Google Oneindia Tamil News

காசி ஆனந்தன்

தமிழ்ப் பற்று கொண்ட அனைவரும் அறிந்த பெயர் காசி ஆனந்தன். உணர்ச்சிக் கவிஞர் என்று சி.பா.ஆதித்தனாரால் போற்றப்பட்டவர்.பாரதியின் விடுதலை வேட்கையும், பாரதிதாசனின் தமிழ் உணர்வும் இவரது கவிதைகளில் காணலாம். போராட்டமே வாழ்வாகவும்கொண்ட கவிஞர். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் எழுதிய கவிதைகள் காரணமாக சிங்களச் சிறையில் வாடியவர். பெங்களூரில் நடந்த உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் இவரைச் சந்திக்கும் பேறு கிடைத்தது. அப்போது நமது இணைய தளத்தில்அவரது கவிதைகளை வெளியிட அனுமதி அளித்தார். இதோ பாரதியின் உணர்ச்சிப் பெருக்கமும், பாரதிதாசனின் சீற்றமும் கொண்ட காசிஆனந்தனின் கவிதை:

தமிழா! நீ பேசுவது தமிழா...?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால்
மம்மி என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
பேபி என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை
டாடி என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

உறவை லவ் என்றாய்
உதவாத சேர்க்கை...
ஒய்ப் என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை...
இரவை நைட் என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை ஸ்வீட் என்றாய்
அறுத்தெறி நாக்கை...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான்
லெப்ட்டா? ரைட்டா?
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி பைட்டா?
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் லேட்டா?
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை
பிரண்டு என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
சார் என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

பாட்டன் கையில
வாக்கிங் ஸ்டிக்கா
பாட்டி உதட்டுல
என்ன லிப்ஸ்டிக்கா?
வீட்டில பெண்ணின்
தலையில் ரிப்பனா?
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

- காசி ஆனந்தன்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X