தீர்க்கமும் தரிசனமும்
தீர்க்கதரிசனங்களின்
வாயிலாகவே
பரலோகராஜ்யம் சமீபம்
என்பதின் தொலைவை
இன்று
கணக்கிட்டபொழுது
நோவா பேழையின்
பிரமாண்டத்தை
மிஞ்சியிருந்தது.
யோர்தான் நதியில்
திருமுழுக்கு
வேண்டுமெனில்
உன்
பாதரட்சைகளை
அவிழ்க்கத்
திராணியில்லாத
ஒருவனும் அவசியம்.
அல்பாவும்
ஒமெகாவும்
யெகோவாவின்
வழியெனில்
நான் தாம்.
கெபிகளில்
கர்சிக்கும்
சிங்கங்களுக்கிடையேயான
தானியேல் நான்.
என்
வாய் கட்டப்பட்டதால்
அவைகள் பேசுகின்றன.
நீண்ட கூந்தல்களால்
புண்ணிய பாதங்களைத்
துடைத்து
நறுமணத்தைலம் பூசும்
தருணங்களுக்காக
காத்திருக்கலாம்.
ஐந்து தலையும்
மனித முகமாய்
உடம்புகள்
மிருகவடிவாய்
அக்கினி கக்கியபடி
சமுத்திரத்திலிருந்து
இந்த முறை
பெரும் பிரளயம்
வரலாம்.
கள்ளர்களைப்போல்
ஓடி ஒழிந்தாலும்
நியாயத்தீர்ப்பு நிச்சயம்
எனவே இன்றுவரை
துன்மார்க்கம்.
சரீரமான அப்பமும்
ரத்தமான திராட்சைரசமும்
இறுதி இரவின்
பசியாறல்.
விடியலுக்கு முன்
கல்லறைக்கதவு
திறக்கப்பட்டிருக்கும்
நான்
பரலோகம் ஏறுவதை
நீயும் பார்ப்பாய்.
தாவீதின் சங்கீதமும்
பிலாத்துவின் கை கழுவலும்
பேதுருவின் மறுதலிப்பும்
அப்போஸ்தலர்களுக்கான
சுவிசேஷங்களுடன்
சுழன்றபடியே
தீர்க்க தரிசனத்திற்கான
ஏற்பாடுகள்.
- நெப்போலியன், சிங்கப்பூர்([email protected])
இவரது முந்தைய படைப்புகள்:
1. முடிவற்ற...
2. சூல்
3. குட்டிச் சாமியாருக்கு...
4.நாக்குகள்
5. தளை
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications