For Quick Alerts
For Daily Alerts
Just In
பகல் பொழுது- ஷைலஜா
பட்டப் பகல்
பக்கத்திலெல்லாம்
பலப் பல ஓசைகள்
வாகன இரைச்சல்
காய்கறிக்காரனின்
தக்காளி கிலோ ஏழுரூபாய்
காகம் ஒன்றின்
ஓயாக் கரையல்
சக நாய் கண்டு
தெரு நாய் குறைக்கும்
யார் வீட்டுத் தொலைக்காட்சியிலோ
மெகா சீரியலில்
மாமியாருக்கும்
மருமகளுக்கும்
வாக்குவாதம்
சின்ராசுக்கடையில்
கல்லாப்பெட்டியில்
காசுபோடும் சத்தம்
செந்தில் சைக்கிள் கடையில்
வை ராஜா வை
பாட்டும் ஆட்டமும்
உச்சிகாலபூஜைக்கு
கோயிலுக்கு விரையும்
கோமளா மாமியின்
மெட்டிஒலி ஓசை
செருப்பு சத்ததிற்கு
முன்னேயே வரவை
கட்டியம் கூறும்
வாய்க்கால் படித்துறையில்
கல்லின்மீது விழுந்து எழும்
துணி(க்)கரமான படீர்படீர்
எதிர்வீட்டுத்தாத்தாவின்
தூக்கிவாரிப்போடும்
ஒற்றைத் தும்மல்
இத்தனை அமளிக்கு நடுவே...
வெய்யிலிடைத் தீவாய்
விண் நோக்கித்
தியானிக்கும்
மரங்கள் மட்டும்
தங்கள் நிழலை
பூமியின்மீது
மெளனமாய் பரப்பும்
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]