முதல் வீடு- நெல்லை சுதன்
முதல் வீடு
முன்னூறு நாட்கள்
முகம் கவிழ்ந்து
மோனத் தவமிருந்த வீடு
இரு உள்ளங்களின்
இன்ப கணங்களின்
இளஞாயிறாய் - எனை
இனம் காட்டிய வீடு
பன்னீர் குடத்தினுள்
பாவமறியாப் பருவமாய் எனை
பக்குவப் படுத்திய
பாசத்தின் கோயில்
ஊனை உயிராக்கி
உயிரை உணவாக்கி
என் உயிர்த்துடிப்பை
பதிவு செய்த வீடு
அன்பின் கூடாம்
அருள் வீட்டை விட்டு
அடியெடுத்து வைத்தேன்
அகிலத்தின் அதிசயம் காண!
என் சொல்வேன்
இங்கு இழிநிலையை
இதயம் கசந்திடும்
இருட்டு வாழ்க்கை
கொலை கொள்ளையின்
கூட்டுறவு விழா
பொதுநலப் போர்வையில்
சுயநலப் பேய்கள்
அரசியலின் அவலங்கள்
ஆன்மீகத்தில் அசிங்கங்கள்
பதவியில் பாவங்கள்
பாமரனின் பரிதாபங்கள்
நம்பி வந்த எனக்கு
நச்சுக் காற்றால்
மூச்சுத் திணருகிறது
ஓடுகிறேன் கல்லறையை நோக்கி
மீண்டும் பிறப்பேன் - அந்த
வசந்த வாசத்திற்காக
என் முதல் வீட்டின்
இனிய சுவாசத்திற்காக
ஆம்
என் தாயின்
கருவறை சுகத்திற்காக !












Click it and Unblock the Notifications