எம்தமிழ் செம்மொழி!
எம்மொழியைச்
செம்மொழியாய் அறிவித்தீர்
எங்கள் செவிகளிலே
தேன் அள்ளித் தெளித்தீர்!
எத்திசையும் புகழ் மணக்கும்
எம் தமிழை ஏற்றி வைத்தீர்
அரியணையில்
வாழ்க! வாழ்க!
கம்பநாட்டுக் கவியே!
எங்கள் பொதுமறையின் புலவா !
துறவு கொண்டு - தமிழுக்கு
வரவு தந்த இளங்கோவா !
பாட்டுக்கொரு புலவா !
புரட்சியைப் பாடி வைத்த தலைவா !
கண்ணனுக்குத் தாசனே!
உங்கள் கனவுகள்
இன்று உயிர் பெற்றது பாரீர்!
நீங்கள் படைத்த தமிழை
நாங்கள் படித்தோம்!
நீங்கள் கொடுத்த தமிழை
நாங்கள் குடித்தோம்!
செம்மொழி அறிவிப்பால்
துள்ளிக் குதித்தோம்!
சீரிளமைத் திறம் நிறைந்த செந்தமிழை
செம்மொழியே என்றீர்கள்
வாழ்க! வாழ்க!
இனிப்
பல்கலைக் கழகமெல்லாம்
பைந்தமிழை அலங்கரிக்கும்!
பன்னாட்டு உறவுகளில் எங்கள்
தமிழ் மொழியே மணக்கும்!
பாரெல்லாம் பைந்தமிழை
வரவேற்கும்!
பைந்தமிழ்த் தாயை
உலகமெலாம் வணங்கும்!
நீரெல்லாம் நிலமெல்லாம்
ஆர்ப்பரிக்கும்
நீண்ட வரலாறு
தமிழ் மொழியை தரிக்கும்!
கீழ்த்திசை மொழிகளிலே
கீர்த்தி பெற்ற மொழியாகும்!
கிழக்குச் சூரியனாய்த்
தமிழ் என்றும் வாழும்!