அருமை மகளே !
கண்ணே, எப்படி இருக்கிறாய்
அப்பனின்றி?
பகிர்ந்திட இயலா
பல இருப்பினும்
உன் நினைவிலேயே வாழும்
தகப்பனாய் சில
உபதேசிக்கிறேன்..

உனக்கு அம்மைதான்
அப்பாவும் கூட..
தந்தை சொல் மந்திரமல்ல
(தந்திரமும் அல்ல.. )
தாய் சொல் மட்டும் கேள்..
தனித்து இயங்காதே
உன் கால்கள் உனக்கானது
ஆகும் மட்டும்
அன்னம் தவிர்க்காதே
பசிக்கு உண்
பசியால் வாடும்
வயிறுகளையும் தவிர்க்காதே
இயன்றதை கொடு
ஈவது நலமே
பிடித்ததை படி
கல்வி புத்தகத்தில்
மட்டுமல்ல
சுற்றம் நோக்கு
ஆயிரம் புத்தகங்களை
உலகம் உனக்கு திறக்கும்
அதிகாலை விழித்தெழு
அம்மைக்கு உதவு
அகந்தை கொள்ளாதே
எப்போதும் கவனமாயிரு
மன்னிப்போ
நன்றியோ
முகம் பார்த்து சொல்
குறுஞ்செய்தி தவிர்
மனிதம் பெரிதென நினை
பிராணிகள்
நண்பர்களே..
குனிந்து நட
பெண் என்பதால் அல்ல
எறும்புகள் மிதிபடக்கூடும்
குறும்புகள் பல செய்
ஆனால்
பிடிவாதம் தவிர்
பேதமின்றி
நட்பு கொள்
ஆங்கே தீயவை தவிர்
நினைவில் கொள்
உன் முதல் நட்பு
அம்மையே
மறவாமல்
யாவும் பகிர்
வளர்ந்தபின்
அம்மையின்
கரம் நீ பற்று
பகுத்தறிவோடு
பக்தி கொள்
ஆகச்சிறந்தது
அன்பென்பதை மறவாதே
கடுஞ்சொல்லும் உதாசீனமும்
கொலைக்கு சமானம்
யாரையும் கொல்லாதே
உறவுகள் தவிர்க்காதே
உண்மையாயிரு
அகமொன்றும்
புறமொன்றும் பேசாதே
தமிழ் பயில்
கவிதை பழகு
ஆசையின் கடிவாளம்
உன்னிடமே இருக்கட்டும்
இறுதியாய்
எந்நிலையிலும்
உன் சுயம் இழக்காதே!
- செல்வநாயகன்












Click it and Unblock the Notifications